வந்தவங்க...

வாங்க

ஈரம்

>> Monday, 28 May 2012

ஜன்னலை சாத்தியப்பிறகும் குளிர் உள்ளே பாயாமல் இல்லை. சிறுப்பிராயத்தில் மார்கழி மாதத்து இரவுகளில் போட்டுக் கொண்ட அப்பாவின் டெர்லின் சட்டை ஞாபகத்துக்கு வந்தது. கண்ணை இறுக மூடியும் தூக்கம் வரவில்லை. நூறு ஆடுகளை கண்ணுக்குள் வைத்து எண்ணியாகி விட்டது. கண் சொருகும் நேரத்தில் உடலே உலுக்கிப் போடுவது போல் நடுங்கிற்று. சரிவுகளில் தொடர்ந்து உடல் சறுக்கி விழும் ஒரு விசித்திரமான உணர்வு.

யமுனா பக்கமாய்த் திரும்பிப் பார்த்தாள். மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் ஸ்டெல்லா பெரிய கண்களை மொட்ட மொட்ட மலர்ந்து படுத்திருப்பது தெரிந்தது. ஆனாலும் யாரும் பேசிக் கொள்ளவில்லை. ஒரு நிமிஷம் ஸ்டெல்லா சிலிர்த்துப் போய் இவளது கைகளை இறுக்க பற்றிக் கொண்டாள். அவள் உள்ளங்கையில் ஏல வாசனை வீசுகிற மாதிரியிருந்தது. இரவு சாப்பிட்ட டீயும் பன்னும் தொண்டைக்குழியில் நின்றது. திடுமென ஸ்டெல்லா இவள் கைகளை இறுக பற்றிக் கொண்டாள். “ சங்கர்ட்ட சொன்னியா? “ என்றாள். “இல்ல…”என்னும் போதே இவள் குரலில் நடுக்கம் வந்தது. என்ன சொல்வான் சங்கர் என்று நினைக்கையில் உத்திரவாதமில்லாத ஒரு பயம் வந்தது. ”நீங்க எதுக்கு வேன் ஜன்னல மூடாத இருந்தீக? மூடிருந்தா அவன் கைய வுட்டிருப்பானா?” என்று சொல்லலாம். ”அதெல்லாம் ஒண்ணுமில்ல…” என்று சாதாரணமாக சொன்னால் கூட சாராயம் குடித்து விட்டு அப்படி பேச மாட்டான். “அப்பவே செத்திருக்கணும்டி. அசிங்கமால்ல”என்று கூட பேசுவான். “என்ன சொன்ன?”என்றாள் ஸ்டெல்லா. “கலவரமாருக்கு. ஸ்டெல்லா வீட்டுல தங்கிட்டு வர்றேன்னேன்” ஸ்டெல்லா மறுபடி அமைதியானாள். கம்பம்மேடு புதர் பக்கம் தான் இவளைப் பார்த்தாள். சட்டென்று சேலையை இரண்டாய்க் கிழித்து பாதியை இவள் மேல் போர்த்தினாள். வழிநெடுக இவள் வாந்தி எடுக்க எடுக்க கழுத்தைப் பின்பக்கமாய் ஆதரவாய் பிடித்தபடி வந்தாள். “என்ன செஞ்சானுவ?” “வாய்ல மூத்திரம் பெஞ்சானுக. தண்ணி கேப்பியளானு கேட்டானுக?” துண்டுத்துண்டாக பிளந்து விழுந்தன வார்த்தைகள். ஸ்டெல்லா அவள் முதுகை இறுக பிடித்துக் கொண்டாள்.ஜீப் கடந்தபடி இருந்தது. அவர்களின் மெளனத்துக்கிடையே ஜீப் டிரைவர் ஒருமுறை திரும்பிப் பார்த்த மாதிரி இருந்தது. இவள் ஜன்னல் பக்கமாய் முகத்தை திருப்பிய போது காற்றில் எங்கும் மூத்திர வாடை அடிப்பது போலிருக்க குமட்டிற்று. கண்ணை மூடினால் ஒற்றையடிப் பாதைகள். மலைச்சரிவு. எங்கும் இருட்டு. வரிசையாய் ஜீப்புகள். இவ்வளவு நாள் அண்ணன் தம்பியாய் பழகிய உறவுகளின் நிர்கதியான வார்த்தைகள்.ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டு சைலப்பன் “விட்டுருற சொல்லுங்கண்ணே” என்று கெஞ்சியதற்கு “எங்களால ஏதும் செய்ய முடியாது” என்று துரையண்ணன் சொல்வது கேட்டது. “நீ டீ போட்டா தாம் ஏகதேசத்துக்கு வாசனையே வருது”என்று சொன்ன துரையண்ணன் குரல் அந்த நிமிஷம் ஞாபகத்துக்கு வந்துப் போனது. சங்கரியின் மார்பின் மேல் விரைசலாய் ஒரு கை தடவி மறைந்தது. “எந்த பொறுக்கி நாய் அது?”என்று சங்கரி கத்தினாள். “வேணாம்க்கா..கத்தாதீக…பார்டரைக் கடந்திடுவோம்” என்றான் சைலப்பன்.சங்கரி குமறி பெரிய குரலெடுத்து அழுதாள். இருட்டைக் கிழிக்கத் தெம்பற்று அவளது அழுகை சத்தம் விசும்பலாய் மவுனித்தது. இவள் சங்கரியை தோளோடு சாய்த்துக் கொண்டாள். ப்ளீச்ச்ச்—பான்பராக் போட்டு துப்பின எச்சில் இவள் கன்னத்தில் விழுந்தது. தண்ணி வேணுமாம் …கொடுங்கடா என்று இரைந்தவன் ஜீப்பின் மேல் கம்பியால் அடித்தான். தகரம் மெல்ல முனங்கி வளைந்தது.சைலப்பனின் முதுகில் மூன்று நான் கு பேர் திமுதிமுவென அடித்தனர். சைலப்பன் ஸ்டியரிங்கில் குனிந்து படுத்தமாதிரி ஒடுங்கினான். அவனது வலது கை சாவியை மடக்கிப் பிடித்திருந்தது. அவர்கள் ஜன்னல் வழியே வெளியே போய் அடுத்த ஜீப்பை நோக்கிப் போனார்கள்.சைலப்பன் எந்திரிக்காமல் போக சங்கரி அவன் கன்னத்தைத் தட்டி “அண்ணே” என்றாள். கிறங்கின கண்ணோடு சைலப்பன் எழுந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. ஒருகணம் அவன் சுதாரிப்பதற்குள் ஜீப்பை வலதும் இடதுமாய் ஆட்டினார்கள். யமுனாவுக்கு நெற்றி ஜீப்முனையில் இடித்து வீங்கிற்று. உள்ளே கை விட்டு எக்கி ஜீப் கதவைத் திறந்தது தெரிந்தது. “விடாதீங்க..கதவ பிடிங்க”என்று சைலப்பன் அலறினான்.அதற்குள்ளாக அவர்கள் இவளை வெளியே இழுத்தனர். சங்கரியை பிடரிமுடியைப் பிடித்து எட்டி உதைத்தார்கள்.அண்ணே என்ற கெஞ்சல்கள் மீறி “விட்டுடுங்கண்ணே” என்ற சைலப்பனின் கதறல் மீறி சங்கரியின் வாயில் மூத்திரம் பெய்தார்கள். ” தூங்கு”என்றாள் ஸ்டெல்லா. ஒருநிமிஷம் மறுபடியும் உடல் உதறியது. அந்த கறுத்தக் காட்டுக்குள் சங்கரி எங்கிருப்பாள் இப்போது என்று நினைக்கையில் ஏற்பட்ட பயத்தில் வியர்த்தது.சைலப்பன் தேடிப் போயிருக்கிறான் என்று ஸ்டெல்லா சொன்னது கனவில் கேட்ட மாதிரி இருந்தது. இந்த இருட்டில் எங்கே போய் தேட முடியும் ? அவள் தொடர்ந்து அலறினபடி இருந்தது காதுக்குள் இடைவிடாமல் கேட்பது போலிருந்தது. த்டால் என்று எழுந்து தண்ணீர்க் குவளையைத் தேடினாள். காலமெல்லாம் தண்ணீர்க் குவளையைக் கையிலெடுக்கும் நேரமெல்லாம் மூத்திர ஞாபகம் வருமாறு ஆகி விட்டதென்ற நினைப்பு அருவருப்பாயிருந்தது. பக்கத்து அறையில் முனகல் சத்தம் இன்னும் கேட்டபடி இருந்தது. “அம்மாச்சி தூங்காதா? என்று ஸ்டெல்லாவிடம் கேட்டாள் இவள். ஸ்டெல்லா இருட்டிற்குள் கையசைத்து “இல்ல..அதுக்கு பை நிரம்பிட்டா கஷ்டப்படும்”என்று சொல்லும் போது சுவரில் அவள் கைவிரல்கள் ராட்சத நிழலாய் பரந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மாச்சி தான் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து உற்று நோக்கும் கண்களோடு இவளைப் பார்த்தது.”யாரு”என்றாள். “வூட்டுக்கு வர்றவகள யாரு என்னனு என்ன கேள்வி”என்றாள் ஸ்டெல்லா சட்டென்று. அதை அம்மாச்சி கண்டுக்கொள்ளவில்லை என்பதை அவளின் அடுத்தக் கேள்வி காட்டியது.”கல்யாணம் ஆயிடுச்சா?”என்றாள். “ஆமா..” “எங்கருந்து வார? பேரு என்னத்தா?” “யமுனா ஆச்சி…கம்பமேடுல…”என்றவளை இடைமறித்து “ அங்க பிரச்னைனு சொன்னாகளே தாயீ…ஏதுமில்லயே?”என்றாள்.ஸ்டெல்லா சட்டென்று கண்ணை உயர்த்தி சொல்லாதே என்பது போல் பாவனை செய்தாள். ஆச்சி குனிந்து உற்றுப் பார்த்துக் கொண்டே “கேட்டுச்சா?”என்றாள்.”தெரிலயே ஆச்சி”என்றாள் இவள். “உள்ள வா”என்றாள் ஸ்டெல்லா. இவர்கள் கடக்கிறார்கள் என்ற எண்ணம் இல்லாது ” எவன் சொல்லுதான்..அரசியல்வாதியும் ஒண்ணுமில்லங்கிறான். கோட்டுக்காரனும் ஒண்ணுமில்லங்கிறான்.பத்திர்கைக்காரனும் ஒண்ணுமில்லங்கிறான்”என்று சத்தமாய் சொல்லியபடி பெரிசாய் ஏப்பம் விட்டள்.”யம்மாடி”என்று அதனோடு சம்பந்தமில்லாமல் இழுவையாய் சத்தம் எழுப்பினாள். இவள் அவளை வினோதமாய்ப் பார்ப்பதைப் பார்த்த ஸ்டெல்லா “அம்மாச்சிக்கு கொஞ்சம் உடம்பு சரிகிடையாது யமுனா…பத்து புள்ள பெத்து பெத்து தன்னை கவனிக்காது விட்டுருச்சு. முனகினா கூட இப்ப ஒண்ணுக்கு ஒழுக்கும். நாப்பது வயசுலருந்து இப்படி தானாம். வெளிய சொல்ல கூச்சப்பட்டு தெவங்கிருச்சு. இப்ப பைய கட்டி வுட்டுட்டான் டாக்டர்” என்றவள் மாற்றுப் புடவையும் ரவிக்கையும் துண்டும் கொடுத்து மாத்திக்க என்றாள். பச்சைப்பசேல் என்று தண்ணீர் மேலே பட்டவுடன் மெல்ல ஒரு தெளிவு வந்த மாதிரியிருந்தது. சங்கருக்கு போன் செய்ய வேண்டுமென்று தோன்றிற்று. பையில் செல்போன் இருக்கிறதா என்று பார்க்க மறந்தது ஞாபகம் வர அவசர அவசரமாகக் குளித்து வெளியே வந்தாள். பரபரவென்று பையில் தேடிய போது உள்பக்கமாய் செல் இருந்தது. சங்கருக்குப் போட்டபோது அவன் எடுக்கவில்லை. மாரியப்பனோடு குடிக்கப்போயிருக்கலாம். அந்தப் பழக்கம் மட்டும் இல்லையென்றால் இப்படி கூலிக்குத் தோட்டத்துக்குப் போக வேண்டியிருக்காது. ஒரு நிமிஷம் தொண்டைக்குள் முள்ளாய் இவளுக்கு அடைத்தது. ஸ்டெல்லா எட்டிப் பார்த்து “ப்ளவுஸ் சரியாருக்கா?”என்றாள். இவள் தலையசைத்ததையும் ஏறத்தாழ ரவிக்கை சரியாய் இருந்ததையும் பார்த்து ஸ்டெல்லா திருப்திப்பட்டுக் கொண்டதாய்த் தோன்றிற்று. என்ன சாப்பிடுறே என்று கேட்டாள் இவளிடம். வேணாம் வேணாம் என்று சொல்லச் சொல்ல இஞ்சி கலந்த தேயிலை போட்டு பன் கொடுத்தாள். சூடான தேயிலை உள்ளே நனைத்த பன்னுடன் சாப்பிட சாப்பிட சங்கரியின் ஞாபகம் ஒரு இனம்புரியாத குற்றவுணர்வை ஏற்படுத்திற்று. திடிரெனத் தேம்பி அழும் யமுனாவை சமாதானப்படுத்த தோன்றாமல் ஸ்டெல்லா விறைத்த மாதிரி பார்த்தபடியிருந்தாள். “தூங்கு” என்றாள் ஸ்டெல்லா மறுபடி. அவளுக்கு மிகப் பெரிய ஒரு கஷ்டத்தை ஏற்படுத்திய மாதிரி இருந்தது திடீரென்று. “காலைலேயே கிளம்பிடுறேன்”என்றாள் கிசுகிசுப்பானக் குரலில்.ஸ்டெல்லா அமைதியாய் இருந்தது தான் நினைத்தது உண்மையோ என்று நினைக்கத் தோன்றிற்று.இவளுக்கு “மணி என்ன இருக்கும்?என்றாள். அதற்கும் ஸ்டெல்லா பதில் சொல்லாது போக தலையைத் திருப்பிப் பார்த்தாள். வாய் அகன்றிருக்க ஸ்டெல்லா தூங்கியிருந்தாள். பக்கத்து அறையிலிருந்து “பரமண்டலங்களிலுள்ள எங்கள் பிதாவே”என்று அம்மாச்சி முணுமுணுக்கும் ஜெபம் தெளிவாகக் கேட்டது. சங்கரி பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்று மனசுக்குள் முருகனை நினைத்துக் கொண்டாள். ஸ்டெல்லா விழித்திருந்தால் எதனால் இந்த அணைபிர்ச்னை என்று கேட்டிருக்கலாம். பள்ளிக்குடம் வரைப் படித்தவள். நிச்சயம் விவரம் தெரிந்திருக்கும். கம்பம் தெரு வழியாய் அவள் ஒரு ராஜகுமாரியை மாதிரி சைக்கிளில் ஸ்கூல் போவதைப் பார்த்து இவள் பெருமிதமடைந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இப்படி ஒரு நாள் அவள் வீட்டில் பிரச்னைக்கு பாதுகாப்பு கேட்டு வருவோம் என்று நினைத்தும் பார்த்திருப்போமா என்று நினைக்கும் போது இனம்புரியாத கூச்சம் வந்தது. தூங்கினால் ஏதும் அதிர்ச்சியில் மனசிலுள்ளதைப் புலம்பித் தொலைத்து விடுவோமோ என் கிற பயமும் எழுந்தது. போர்வையை தன்னிச்சையாய் மார்பு வரை இழுத்து பக்கவாட்டாய் அணைக் கொடுத்தாள்.வெளியே சில்வண்டின் ஒலி மீறி ஸ்டெல்லா குறட்டை விட ஆரம்பித்திருந்தாள். பசித்து நீண்டு கிடக்கும் இரவின் முன் பயத்துடன் மண்டியிட்டு நிற்கும் ஒரு விலங்காய் இருளை வெறித்த படி கிடந்தாள். அம்மாச்சியின் முணுமுணுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. மெல்ல நகர்ந்து செல்போனை எடுத்துப் பார்த்தாள்.சங்கர் அவளை அழைக்கவில்லை. கூப்பிடலாமா என்று நினைத்தாள். ஒரு நிமிடம் அவனுக்கு வேண்டப்படாத ஒரு ஜந்துவாய் இருப்பது போலிருந்தது.மறுபடி போனை தலைக்கு அடியில் வைத்து விட்டுப் படுத்தாள் அம்மா என்று கதறி அழ வேண்டும் போலிருந்தது. சங்கரைக் கட்டாத என்று அம்மா சொன்னதையெல்லாம் மீறி இன்று அவனைக் கல்யாணம் செய்ததற்கு இன்று வேலை முடிந்து வீட்டுக்கு வராமல் எங்கே இருக்கிறாய் என்று கூட கேட்க திராணியற்றவனாய் அவன் இருப்பதை நினைத்து அழுகை வந்தது. என்ன எதிர்பார்ப்பில் வாழ வேண்டும்? திடீரென்று சம்பந்தமே இல்லாமல் இவள் வாயில் மூத்திரம் பெய்தவனின் கொடூரமான குரல் ஞாபகம் வந்தது. அந்தக் குரலின் வீச்சு பெருக்கெடுக்க எடுக்க தனியாய் இருப்பது போல் உணர்வு பெருக்கெடுக்க இவள் ஸ்டெல்லாவின் பக்கமாய் சுருண்டாள். ஸ்டெல்லா இவள் உடல்சூடுபட்டு திரும்பி “தூங்கும்மா..”என்றது பெருத்த ஆறுதலாயிருந்தது. மறுபடி அவள் கைகளை கோர்த்துக் கொண்டாள். மெல்ல மெல்ல மூடிய ஜன்னல் வழியாய் விடிவது , ஒரு வெளிச்ச இறகு படர்வது போல் தெரிந்தது. அறையின் சுண்ணாம்பு சுவர்களில் பெயர்ந்த காரைகளில் ஒரு வெளிச்சத்துளி புலப்பட்டது. அம்மாச்சி விறுவிறுவென அறைக்கதவைத் தட்டினாள். “மோளே…வெளிய போயிட்டேன் ..கொட்டிடு”என்றாள். ஸ்டெல்லா எழுந்து “இரு..வாரேன்”என்று உள்ளே போனாள்.மலமும் மூத்திரமுமே வாழ்க்கையாகிப் போகும் வாழ்வின் கதவொன்ரை அம்மாச்சி தட்டுவது போலிருந்தது இவளுக்கு. ஸ்டெல்லா உள்ளே வந்ததும் “நான் கெளம்பட்டா ஸ்டெல்லா? அவுக மூணு வாட்டி போன் பண்ணிருக்காக ”என்றாள். “இரு..டீ வாங்கியாரேன்”என்ற்வளிடம் வேண்டாம் வேண்டாம் என்று மல்லுக் கட்டி கிளம்பினாள். “சீலை ஏதுனு சங்கர் கேட்டா?”என்றாள் ஸ்டெல்லா வாசலுக்கு வந்து. இவள் அமைதியாக நின்று வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள்.திடீரென நினைப்பு வந்தவளாய் மறுபடி உள்ளே அம்மாச்சி அறைக்குள் போய் “கெளம்புறேன் ஆச்சி “என்றாள். “பாத்துப் போ. கலவரமெல்லாம் ஒண்ணுமில்லயாம். ரோசரி சொன்னா…கம்பம் போலீஸ்காரக பத்து பதினொரு இடுக்கி பெண்டுகள குமுளியாண்ட பத்ரமா விட்டுட்டு வந்தாகளாம்..வெறும் தண்ணிப் பிரச்னை தான..அரசியல்வாதிக நீச்சலடிப்பானுக…”என்றாள் ஆச்சி. முக்கிப் பேசியதில் அம்மாச்சியின் கால்களிடையே ஈரம் பரவுவதை காய்ந்த கண்களால் வெறித்தபடி இருந்தாள் யமுனா.

மேலும வாசிங்க...

நானும் விகடனும்-

>> Friday, 27 January 2012

.
*********************************
'29சி-யில் பெரம்பூரில் இருக்கும் அத்தை வீட்டில் இருந்து கிளம்பி, மவுன்ட் ரோடு டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் அப்பாவுடனும் சுட்டெரிக்கும் வெயிலோடும் இறங்கினேன். அரை தாவணி ரெட்டை சடையுடன் ஓர் அப்பட்டமான மாணவிக்கான பிம்பம் என் மீது ஒட்டியிருந்தது. அப்பா என்னுடன் நம்பிக்கையாக வந்த அந்த நிமிஷம் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது. விகடன் அலுவலகத்துக்குள் நாங்கள் நுழைந்தோம்.

'யாரைப் பார்க்கணும்?’ என்று ஒருவர் கேட்டார். அம்முவும் நானும் நடத்திவந்த 'மாறுதலா’ கையெழுத்துப் பத்திரிகையை அவரிடம் நீட்டினேன். அதில், அட்டையில் ஆசிரியர் பாலசுப்ரமணியன் கைதானதைக் கண்டித்து ஒரு கொலாஜ் ஓவியம் சிவப்ரியா வுடன் சேர்ந்து செய்திருந்தோம். அதை அவர் புரட்டிப் பார்த்துக்கொண்டே, 'எங்கு இருந்து வர்றீங்க?’ என்றார். 'திருநெல்வேலி’ என்றேன். அவர் புருவங்கள் உயர்ந்து இறங்கின.

எனது இரண்டு கதைகளை அவரிடம் நீட்டினேன். அவர் அதன் முதல் வரியை வாசித்த மாதிரி 'கொடுத்துடுறேன். தபால்ல சொல்லுவாங்க’ என்றார். ஊருக்கு வந்து அடுத்த ஆண்டும் ஆகி விட்டது. மற்ற சில பத்திரிகைகளுக்கும் கதைகள் அனுப்பி, அவை திரும்பிவந்தன. ஒரு நாள் ஒரு வெள்ளை நிற தபால் கார்டில் என் கதை தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதை வேறு எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவில்லை என்றும் உறுதிமொழி கேட்டு விகடனின் கடிதம் வந்தது. அந்தத் தருணம் என் வாழ்வின் உறைந்த தருணங்களில் ஒன்று.

பத்திரிகைகள் படிப்பது தவறு என்ற கோட்பாடுகளில் உழன்ற ஒரு சமூகத்தில், என் அம்மா பத்திரிகைகள் வாசித்ததால் நானும் படிப்பது வழக்கமாயிற்று. என் சிநேகிதி தங்கத்தின் அத்தை ஒரு மிகப் பெரிய புத்தகப் பிரியை. அவர் தேர்ந்தெடுத் துக்கொடுத்த இந்துமதியின் 'தரையில் இறங்கும் விமானங்கள்’ கதை ஏதோ ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மணியன், ஜெயகாந்தன், சிவசங்கரி, பால குமாரன் கதைகளை வாசிக்க ஆரம்பித் தேன். வீட்டில் அப்போது சுழலும் படிப் பகம் இருந்தது. 'வந்த அன்னிக்கே விகடன் தந்தா மட்டும்தான் வாங்குவோம்’ என அம்மா சொன்னதால், புத்தம் புதுசாக விகடன் வீட்டுக்கு வரும்.

நான் விழுந்து விழுந்து பாடப் புத்தகம் மாதிரிப் படித்தேன் என்றால், அது சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை’தான். புத்தகம் வாங்கினால் அதை யாரும் பறித்துவிடக் கூடாது என்று மொட்டை மாடியில் ஒளிந்து வாசிப்பேன். பரந்த சினிமா தளத்தை முதன்முதலில் நான் அறிந்துகொண்டது அதில்தான்.

திருநெல்வேலியில் ஒரு வட்டத்தை மீறாத வாழ்க்கை கற்றுக் கொடுக்கப்பட்ட பெண்ணுக்கு ஜன்னல் திறந்து வானத்தைக் காட்டியதில் விகடனின் பங்கு ஏராளம். விகடனில் கதை வருகிறது என்பது இனம் புரியாத ஒரு நெகிழ்ச்சி அதனாலேயே வந்தது. முந்தின வாரம், கதை அடுத்த இதழில் வரும் என்றும் ஒரு சிறு தகவல் தபால் மூலம் வந்தது. விகடனும் வந்தது. படபடவெனப் புத்தகத்தைப் புரட்டுகிறேன். அவசர அவசரமாக வீட்டுக்குள் போய் பக்கங்களைப் புரட்டி கதையைக் கண்டுபிடித்தேன். அது நிழல் என்னும் சிறுகதை. ஓர் ஆப்பிரிக்க இளைஞனை ஒரு பிரா மணப் பெண் திருமணம் செய்த பிறகான நிகழ்வுகளைச் சொல்லும் கதை. தனியாக கண்ணாடியில் அந்தக் கதையின் பக்கங்களைப் பிரதிபலித்துப் பார்த்து மகிழ்ந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்தக் கதைக்குச் சன்மானமாக வந்த பணத்தில், அம்மு, நான் எல்லாரும் ராயல் தியேட்டரில் போய்ப் படம் பார்த்தோம். அப்புறம் திருவண்ணாமலை சித்தி, கஸ்தூரி அத்தைக்கு என்று நான் ப்ரியம் வைத்த சிலருக்கு அழகான ஒரு விளக்கு வாங்கிக் கொடுத்தேன்.

நான் கொடுத்த அடுத்த கதையும் பிரசுரமானது. அதற்குப் பிறகு, பிற பத்திரிகை களிலும் எழுதத் தொடங்கி, முதல் தொகுப்பை ஜெகன் வெளிக்கொண்டு வந்தபோது அந்த வெளியீட்டு விழாவில் பேசிய பிரபஞ்சன், விகடனில் பணியாற்றும்போது தான் தேர்ந்தெடுத்த நிழல் கதையைப்பற்றிக் குறிப்பிட்டது ஆச்சர்யமாக இருந் தது.

இடையில் நான் பெரிதாக இயங்காத ஒரு காலகட்டம் ஒன்று இருந்தது. மறுபடி நான் தீவிரமாக எழுத ஆரம்பித்தபோது முழுசாக என் கதைகள் இடம்பெற்றது விகடனில் மட்டும்தான். 'நீங்க விகடன்ல வேல பாக்குறீங்களா?’ என்றுகூட இரண்டு மூன்று முறை கேட்டு இருக்கிறார்கள். ஓர் உறவு என்பது அதன் இருப்பின் பொருட்டல்ல... உணர்வின் பொருட்டே என்பதை எனக்கும் விகடனுக்குமான உறவு கற்றுக்கொடுத்தது.

திருநெல்வேலியில் விகடன், வியாழக்கிழமையே வந்துவிடும். பொத்திப் பொத்தி அதை ஞாயிறு மாலை வரை வாசிக்கும் ஆர்வம் என்னை சாப்பிடக்கூட விடாமல் தடுக்கும். 'விகடன் வந்துட்டா, பேச மாட்டாளே’ என்பது இன்று வரை என் மீதான குற்றச்சாட்டாக என் குடும்பம் என் மீது வைத்திருக்கிறது. அந்தக் குற்றசாட்டை என் இறுதி மூச்சு வரையும் சுமக்க விரும்புகிறேன்.

விகடன் சம்பந்தமான இளவயது நினைவுகள் மனசில் இன்னும் அலையடிக்கின்றன. சௌபா அண்ண னின் கட்டுரைகளைப் படித்து, எங்களோடு படித்த அவரது உறவுக்காரப்பெண் ணிடம் அவரைப் பற்றி நானும் அம்முவும் விசா ரித்து அலைந்த நாட்கள். எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தது ஜூ.வி-யின் அரசியல் கட்டுரைகள்தான் . மறுபடி மறுபடி ஒவ்வொரு கட்டுரையையும் வாசிப்பேன். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஈழம் குறித்த விகடனின் நிலைப்பாடு ஒன்றுதான். இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கு இல்லாத உண்மையான, தீர்க்கமான தமிழீழக் கனவுகள் விகடனுக்கு எப்போதும் உண்டு.

விகடனில் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர வேண்டும் என மனசில் நிறைய ஆசைகள். என் ஆசை மறுக்கப்பட்டு, நான் எழுதிவைத்த அப்ளிகேஷன் அனுப்பப்படாமல் போக, அதை நோட் டுக்குள் வைத்து வைத்து ஆற்றாமையைச் சுமந்தலைந்த நாட்கள் இன்னும் மனசின் ஓரங்களில்.

'ஹலோ’ பண்பலை வானொலியில் நான் பணியாற்றிய காலங்களின் மிகக் கௌரவமான பரிசாக விகடன் விருதை மனசில் சுமந்திருக்கிறேன். தெற்குப் பக்கத் திறமைகள் மீது பெரும்பாலான ஊடகங்களின் கவனம் விழுந்தது இல்லை. ஆனால், அதை விகடன் கவனித்த படியே இருக்கிறது என்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷம். ஓர் எழுத்தாளராக விகடன் கதைகளில் சில பரீட்சார்த்த முயற்சிகள் செய்யலாம். பேசப்படாத பகுதிகளை உரக்கவே சொல்லலாம். பெண்ணுடல் சார்ந்த வெளிப்படையான விஷயங்களைப் பரவலாக விகடனில் தொடர்ந்து படைப்பாளிகள் பகிர்ந்தும் வருகின்றனர்.

வெளியே தெரியாத நபர்களின் கவிதைகள் உலா வரும் 'சொல்வனம்’ பக்கம் விகடனில் எனக்கு மிகவும் பிடித்த பக்கம். கயத்தாறில் பைபாஸ் பாலம் போட்டது பற்றிய ஒரு கவிதை அதில் வெளியானது. இன்றும் வாராவாரம் ஊருக்குப் போகும்போது கயத்தாறு தாண்டும் நேரம், 'தனியாக நின்றிருக்கும் கட்டபொம்மன் பற்றின’ வரி எனக்கும் கவலையோடு ஞாபகத்துக்கு வரும்.

என் வாழ்வின் துயர் அடர்ந்த பகுதிகளில் நான் யாருடனும் தொடர் பில் இல்லாமல் இருந்தபோதும், விகட னுடன் தொடர்பில் இருந் தேன். தொடர்ந்து விகடனில் கதைகளின் வாயிலாக அதன் ரகசியங்களைப் பகிர்ந்தே வந்திருக்கிறேன் என்றே இதை எழுதும் கணம் நினைக்கத் தோன்றுகிறது. போன வருடம் என் சிறுகதைத் தொகுப்பைத் தொகுத்தபோது அது நிரூபணமும் ஆயிற்று.

விகடனில் நான் எழுதிய நிழல்வலை என்ற கதையின் பிரதி என்னிடம் இல்லாதுபோனது. தொகுப்புக்காக அதைத் தேடிய போதும் கிட்டவில்லை. அதை என் வலை தளத்தில் நான் பகிர்ந்துகொண்டபோது, ஜெர்மனியில் இருந்து சுவேக் என்கிற நண்பர், அந்த விகடன் கதை தன்னிடம் இருக்கிறது என்று சொல்லி, அவர் சாவியை இங்கே ஊருக்கு அனுப்பி, பெட்டியில் இருந்த அந்தக் கதையின் நகலை அவர் அப்பா மூலமாக அனுப்பிவைத்ததை நினைத்தால், அதன் அடித்தளத்தில் இருந்த விகடனின் உறவுப் பாலம் சிலிர்க்கவைக்கும்.

ப.திருமாவேலனின் அரசியல் பார்வை, நா.கதிரின் கட்டுரைகள், எஸ்.ரா-வின் 'கதாவிலாசம்’, சுகாவின் 'மூங்கில் மூச்சு’,பிரகாஷ் ராஜின் தொடர், இப்போது ராஜு முருகனின் தொடர் என்று விகடனின் அற்புதத் தொடர்களில் வாழ்க்கைக்குக் கற்றுக்கொள்ள நிச்சயமாக ஒரு பக்கம் இருக்கும். இருள் சூழ்ந்த அடர் காட்டில் சூரியனின் அனிச்சையான புகுதல்போல என் வாழ்வின் பெரும் பகுதிக்குள் அந்தப் பக்கங்கள் புகுந்து இருக்கின்றன.

தமிழ்நாட்டின் தென்பகுதியில் இருந்து கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்வில் ஒரு குமிழ் தமிழைச் சுவாசித்ததால் இன்று எழுதும், படிக்கும் பலருக்கு அறிமுகமான ஒருத்தியின் பகிர்தல் இது. இத்தனைக் கால நெடும் பயணத்தில் மனிதர்கள் என்னைக் கைவிட்டு இருக்கிறார்கள். அன்பைமுறித்து மறந்து இருக்கிறார்கள். என் வலியைக் கொச்சைப்படுத்தி உவப்பான பானமாக அருந்தி இருக்கிறார்கள். யாரும் அற்ற வெளியில் என்னை நிறுத்தி அந்நியப் படுத்தி இருக்கிறார்கள்.

அப்போதும் துணை நின்ற என் முதல் பத்து நண்பர்களில் விகடன் முக்கியமானவன்!''

மேலும வாசிங்க...

அங்கம்மாள்...

>> Monday, 21 November 2011

”உள்ள வச்சுப் பேசாமா?”என்றார் அங்கம்மாள் சிரித்து. வாசலில் இன்னொரு பக்கத்து வீட்டுப் பெண்மணி உட்கார்ந்திருக்கிறார். டி..கிருஷ்ணாபுரத்து தெருக்களில் ஆடுகள் படுத்திருந்தன. ”இங்கய உக்காரலாமே” வாசலில் ஒரு உரலில் உட்காரப் பார்த்தோம். உடனே உள்ளிருந்து ஒரு மடக்குப் பாய் எடுத்து உட்கார்ந்து, ”இதுல உக்காரும்மா. மண்ணு தரைல….”என் கிறார் அங்கம்மாள்.

தண்ணி கொடும்மா என் கிறார் மலைச்சாமி. அவர் மகன். அங்கம்மாள் உள்ளே போன அவகாசத்தில்,”அம்மா என் முன்னாடி பேசாது. நீங்க உள்ள போங்க” என் கிறார் கிசுகிசுப்பான குரலில். அவரே உள்ளே பாய் விரித்து விட்டு “கலர் வாங்கியாறேன் என் கிறார். தண்ணியை முன்னாடி நீட்டிய அங்கம்மாள்- அவன் முன்னால பேச கஷடப்படுவேன்னு போறான். வந்துடுவான் என் கிறார். மெலிந்த உடல். ரேஷன் அரிசிக் கடையின் சேலை. சில இடங்களில் கைத்துடைத்த தடயமும் சில கிழிந்த பொட்டுக்களும் இருக்கின்றன.ஒரே அறையிலான வீடு. குருவையா கோட் போட்டுக் கொண்டு அங்கம்மாளோடு கல்யாண சேலையில் எடுத்த போட்டோ. பிள்ளைங்களோடு சேர்ந்த எடுத்த போட்டோ. (”மலைசாமிக்கு ஸ்கூல் பிரெஸ் எடுத்திட்டு அப்படியே எடுத்த போட்டோ .”) மண் தரை. ஓரமாய் ஒரு கலைஞர் தொலைக்காட்சி.

”கேளுங்க. நீங்க எத கேட்டாலும் சொல்லுவேன். எனக்கு நியாயம் வேணும். இன்னொரு வாட்டி எனக்கும் என் புருஷனுக்கும் நேர்ந்த மாரி வேற யாருக்கும் நடக்கக் கூடாது. அதுக்குத் தான் ஆத்தா இத்தினி வருஷமா போராடிட்டு இருக்கேன்.” என்றவரின் உதடு பிரிகிறது. அழுகை கிழித்துக் கொண்டு வருகிறது.

எழுந்து அவர் கணவரின் புகைப்படத்தைக் காட்டி,” ராசா மாதிரி இருப்பாரு. ஒத்த ஆளா இந்த வீட்டைக் கட்டி முடிச்சிட்டாரு தெரியுமா? பருத்திக் காட்டு வேல .மூணு வருஷத்துல மூணு புள்ள பெத்தது கிராமத்துல நான் தான். சந்தோஷமா தான் இருந்தோம். எங்க நிலத்துல பஞ்சம்மாளும் அவுக புருஷனும் வேல பாத்தாங்க. அவுங்க மக கல்யாணத்துக்கு வந்த மாப்பிள்ள வீட்டுக்காரங்க பூச்சி, பாலு, அய்யனார் எங்க தோட்டத்து பம்பு செட்டுல குளிச்சாங்க. எங்க வூட்டுல கஞ்சித் தண்ணி குடிச்சாங்க. அதெல்லாம் முடிஞ்சிப் போச்சு. ஒரு நாள் காலைல பருத்தி தோட்டத்துக்கு போலீஸ் வந்தாக . டிஎஸ்பி தங்கபாண்டிய
னுட்டு பருத்திப்பூவ என் கைலருந்து வாங்கிப் பாத்துட்டு ”இப்படியா இருக்கும் பருத்திப்பூவுனு கேட்டாக. சடாலுனு கூட வந்த ஆளு உம் புருஷன் எங்கனு கேட்டான்.தெரியலனு சொன்னோன்ன என்னை போலீஸ் ஜீப்புல கூட்டிட்டுப் போனாக. வழில என் கொழுந்தன கடந்து ஜீப் போனப்ப ”போலீஸ் என்னைக் கூட்டிட்டுப் போகுதுனு அவர்ட்ட சொல்லிரு”னு உரக்க சொன்னேன். அவனும் சரினான்.
என்னைய கூட்டிட்டு உசிலம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனாங்க.சோறு தண்ணிலாம் தரல. வூட்டுக்காரரை கண்டுப்பிடிக்கல. சாயங்காலம் என்னை ஊர்மெச்சிகுளம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போறாங்க. ”உன் புருஷன் எங்கனு கேட்டு நிக்க வச்சாங்க.ராப்பூரா கையை பின்னால கட்டி நிக்க வுட்டாங்க. கால் மொழி கெஞ்சும். அப்படியே சரிஞ்சா முட்டில அடிப்பாங்க. ராத்திரி ஒரு மணிக்கு என் புருஷனை கோடாங்கிநாயக்கன்பட்டில புடிச்சிருறாங்க.அங்கருந்து அவரை ஊமச்சிகுளம் கூட்டிட்டு வந்துட்டாங்க. வாரெண்டுலாம் கிடையாது. வாசல்லேயே என்னப் பாத்துட்டு “அடிச்சாங்களா”னு கன்னத்துல கைத்தொட்டு கேட்டாரு. உடனே பின்னாலருந்து ஒரு அடி. மனுஷன் குப்புற கீழ மல்லாக்க விழுறார். கதற கதற அடிக்காங்க. அவருக்கு வாய்ல நுரை தள்ளுது.. “உன் வீட்டுல பேசின பூச்சி,பாலுஎங்கனு கேக்காங்க. அவன் திருடின நகைலாம் நீ எங்க வித்தனு கேட்டு கேட்டு அடிக்காங்க.

நாங்க மட்டுமில்ல. பஞ்சாம்மா, அவ புருஷனையும் கூட்டிட்டு வந்துடுறாங்க.அவங்களையும் அடிக்கிறாங்க. எனக்கு பாவமா இருந்து “ஏன்யா அடிக்கிறீங்க?னு கேட்டேன். என் தோள்பட்டைல கால்ல,உட்கார்ற இடத்துல லத்தியால அடிக்கிறானுங்க. அந்த இடமே ரத்தமா கிடக்கு. தாகத்துக்கு தண்ணி கேட்டா”மூத்திரம் பெஞ்சி குடினு சொல்றாங்க. எம் புருஷன் “எப்படியா மூத்திரம் வரும்? சாப்பிடவாச்சும் தாங்க”னதுக்கும் அடி.. அவரையும் என்னையும் மட்டும் கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு கூட்டிட்டு போறாங்க. என்னை உள்ள தள்ளிட்டுப் போய் நிர்வாணப்படுத்துறாங்க. நிமிர்ந்து பார்த்த என் புருஷனும் நிர்வாணமா தொங்க வுட்டுருக்காங்க.அவரு அழுறாருஅவரோட பிட்டத்து சதைலாம் பிய்ழ்ஜ்சி கீழே கிடக்குது.புழுவா துடிக்காரு.உடன படுபாவிக மிளகாப்பொடிய கண்ணுல தூவுதானுங்க. எம் புருஷன் என் கண்ணு முன்னால சாகுறது எனக்கு அவரோட முனகலா கேட்டுச்சு. எங்கை உடைஞ்சி இம்புட்டு பெரிசா வீங்கிக் கிடக்கு. ”ஒத்துக்கோடி. மருதைல ஒரு கடைல சாமான வித்தோம்னு ஏதாச்சும் ஒரு கடைல கைய காட்டு வுடு. வூட்டுக்கு விட்டுருவோம்”னாங்க. எப்படி கை காட்ட முடியும்? அந்த பாவம் நமக்கெதுக்கு?
முடியாதுனு வீட்டுக்காரர் சொன்ன வுடனே போலீகாரனுங்க 4 பேரு மாறி மாறி என்னை கற்பழிச்சாங்க. அது ஒரு வெராண்டா. விசாரணைக்கு கூட்டிட்டு வந்த ஆளுங்கலாம் கம்பி வழியா கத்தவும் பய்ந்து பாக்குறாங்க.”மூணு பேரும் உங்கூட ஒரே நேரத்துல இருந்தனுகளா? உன் புருஷன் காவல் காத்தானா?னு சொல்றானுங்க. என் புருஷன் அழுறார். அவளை வுட்டுறுங்க. என் தோட்டத்த வித்து தர்றேன்ங்கார். லத்திக் கம்பால என் உறுப்புக்குள்ள விட்டானுங்க. கதறின எம் புருஷன ஆணி செருப்பு வச்சி குத்தினானுங்க. நகத்தை இழுத்தானுங்க.கொடுமை சாமி.காலைல ஒரு தடவ, மத்தியானம் ஒரு தடவ, ராத்திரி ஒரு தடவனு மாறி மாறி அடிச்சானுங்க. அடிச்சி முடிச்சிட்டுப் போனப்பிறகு நான் வீங்கிருந்த கைய இழுத்து சேத்துக்கிட்டு எந்திரிச்சு அவர் கால் தொங்கினத என் தோள்ல தாங்கிப் பிடிச்சிப்பேன். உள்ளாற வந்து எட்டி மிதிப்பானுங்க.

என் வீட்டுக்காரரோட சொந்தக்காரர் அந்த ஸ்டேஷன்ல ஏட்டா இருந்தார். அவர கை எடுத்து கும்பிட்ட எம்புருஷன் “காப்பாத்து”னாருங்க.”நான் உன்னை புடிச்சிருந்தேன்னா ஒத்துக்க வச்சி எஸ்.ஐ ஆயிருப்பேன்”னு சொன்னார்.இதுல எங்க வீட்டுக்குப் பக்கத்து வீடு. அந்தாள் தான் எங்கள காட்டிக் கொடுத்தது. திரும்ப ஊருக்கு நாங்க வந்தோம்னா பிரச்னையாகும்னு அடிச்சிக் கொன்னுடுங்கனு சொன்னான்.

ராத்திரி ரெண்டு பேரையும் சங்கலியால கட்டி நிர்வாணமா ஸ்டேஷனுக்குப் பக்கத்துல ராத்திரி ஒரு மணிக்கு நடக்க வச்சானுங்க. என்னால நடக்க முடியாம கீழ தெந்த தெந்த என் மார்பை கடிச்சானுங்க.”என்று தேம்பினார்.

“அன்னிக்கே செத்துட்டோம் தாயீ. அடுத்த நாள் சீலைலாம் கட்ட வுட்டு ஊமச்சிக்குளம் ஸ்டேஷனுக்கு வந்தாங்க.அங்கயும் அடிச்சாங்க. சாட்டை,மூங்கில் கட்டைலாம் வச்சி அடிச்சானுங்க.இதெல்லாம் விடக் கொடுமையா அவரோட நாக்குல ஓட்டைப் போட்டானுக. எப்படி துடிச்சார் எம் புருஷன். ராசா மாதிரி நல்லா இருப்பார். “என் புருஷன காப்பாத்துங்கனு அழுதேன். ரெண்டு பொமபளைங்க வந்து ஊசி போட்டுட்டு போனாங்க. ஆனா எம்புருஷன் துவண்டுட்டே போயிட்டார். போலீஸ்காரங்களே பயந்துட்டாங்க. நேரா எங்க ரெண்டு பேரையும் உசிலம்பட்டி டி எஸ்பி முன்னால கொண்டுப் போனாங்க. அவரு எங்களைப் பார்த்து பயந்துட்டாரு. உடனே அவருக்குத் தெரிஞ்ச ஆஸ்பத்திரில கொண்டு போய் சேர்க்க டாக்டருட்ட போன்ல பேசினாரு. செந்தில ஆஸ்பத்திரி கொண்டு போனாங்க. டாக்டரு பேரு சுப்பிரமணியம்(reg no:33678). அன்னிக்கு ஞாயித்துக் கிழமை வெறுமே 2 பேருக்கும் ஆளுக்கொரு ஊசி போட்டாங்க. கட்டில்ல போட்டாங்க. அவரு குப்புறபடுத்திருக்கார்-”நான் செத்துருவேன்ல. நீயும் உசிரோட இருக்காத.நம்ம புள்ளங்க தானா பருத்தி மாதிரி வளரும்னாரு.எங்கைய பிடிச்சிக்கிட்டாரு. கண்ணுலாம் சொருகிருச்சு.
உடம்பு சில்லுனு ஆயிடுச்சு. என் ராசா போயிட்டார். நான் கட்டில் உசரத்துலருந்து குதிச்சேன். க்ரில் கதவுக்கு பக்கம் ஆளா போச்சி. நான் ஒவ்வொருத்தர்ட்டயும் கெஞ்சினேன். ஆர்டிஓ வந்தாங்க. என்ட்ட 2 பொம்பளைங்க வந்தாங்க. என்னையும் கொன்னுடுங்கனு கத்தினேன். அவங்க நாங்க உன்னை காப்பாத்த வந்திருகோம்னு சொன்னாங்க.என்னைத் தூக்குறாங்க. காலுக்கிடைல குபுகுபுனு ரத்தம் கொட்டுதாம்.என்னைக் கொண்டு போய் மீனாட்சி மெஷின் ஆஸ்பத்திரில பீப்பிள்ஸ் வாட்ச் காரங்க சேக்குறாங்க.

மூணாம் நாளைக்கு என்னப் பாக்க முதல்வர் கருணாநிதி வர்றார். இருபது லட்ச ரூபா கொடுக்குறேன். கேசை வாபஸ் வாங்கிடுனு சொன்னார். நான் நிலத்தை வித்து ரூபா தர்றேன். என் புருஷனைத் திருப்பிக் கொடுங்கனு கேட்டேன். மறுநாத்திக்கு பேப்பர்ல கலைஞர் வந்து ஆறுதல் கூறினார்னு செய்தி போட்டாங்க.

13 வருஷமா போராடுறேன். திடீர்னு 2 அக்யூஸ்டை கூட்டிட்டு வந்து கோர்ட்டுல நாங்க தான் குருவையாவைக் கொன்னோம்னு சொல்ல வச்சாங்க. ஜட்ஜ் “எல்லாம் சரி.இந்த கோர்ட்டுல அங்கம்மா யாருனு காட்டுனு கேட்டார்.அவங்களுக்குத் தெரில. ஆனா கோர்ட்டுல அவங்களை விட்டுட்டாங்க. அப்புறமா 2 வைன் ஷாப் காரங்கள வச்சி நாங்க பருத்தி விக்க உசிலம்பட்டி போவோம்னோம்னும் அங்க பக்கத்துல இருந்த வைன் ஷப்ல குடிப்போம்னும் சொல்லி குடிச்சிட்டு எம்புருஷன் தகராறு பண்ணப்ப தலைல அடியாயிடுச்சுனும் சொல்ல சொன்னாங்க. குற்றம் சாட்டப்பட்டவங்க ஸ்டே வாங்கி இந்த கேஸ் முடியுற வரைக்கும் சம்பளம் வர்ற மாதிரி பாத்துக்கிட்டாங்க.

அந்த டாக்டருக்கு காசு கொடுத்து கேரளாக்கு அனுப்பிட்டாங்க. ஆர்.டி.ஓ நல்ல மனுஷன். அவரும் இப்ப எங்கருக்கார்னு தெரிலப்பா. முத அக்யூஸ்டா இருக்குற மகாலிங்கம் கவுரதையா ரிட்டையர் ஆகி பென்சன்லாம் வாங்கினாரு. இப்ப அதுக்கும் கேஸ் போட்டு நிறுத்தி வச்சிருக்காங்க.கேஸ் இழுக்கணும்னு அவனுகளே திடும்னு “டிஎஸ்பியை அக்யூஸ்டா சேக்கணும்னு மனுப் போட்டானுக. அது கொஞ்ச காலம் இழுத்துச்சு.அவரயும் சேர்த்துக்கிட்டு இருக்கணும். சேர்க்கல…

ஊர்ல விசேஷ வீட்டுக்கு என்னை கூப்பிட மாட்டாங்க. கேசுக்காக போனா எவன பாக்கப் போறாளோனு சொல்வாங்க.இதெல்லாம் பத்தி எனக்கு கவலையில்லை. நான் ஜெயிக்கணும். காட்டுல பாம்பு என்ன்னைக் கடிச்சிட்டு. ஒரே புடுங்கு. தூக்கி எறிஞ்சிட்டேன்.நான் கேசுல ஜெயிக்கிறவரைக்கும் சாக மாட்டேன்னு பாம்புட்ட சொல்லிட்டேன். கேஸ் தோத்துப் போச்சுனா அப்படியே கோர்ட்டுலருந்து குதிச்சிருவேன். வாழ மாட்டேன். இன்னொரு அங்கம்மா என்ன மாதிரி தமிழ்நாட்டுல வர மாட்டா இல்லையா?

என் மகன் வக்கீலுக்கு படிக்க வச்சிருக்காங்க. மைசூர்ல அவன் சிறந்த வக்கீல்னு பரிசு கொடுத்தப்ப என்னைக் கூப்பிட்டு கொடுத்தாங்க. அவர தான் அந்த நிமிஷம் நினைச்சேன்.
கேஸ்ல நேரடி சாட்சியான பஞ்சம்மாளுக்கு ரூபா கொடுத்து மாத்தப் பாக்குறாங்க.2001lல சென்னை உயர் நீதிமன்றத்துல காசிமலைங்கிற சாட்சி அவரை போலீஸ் பொய்சாட்சி சொல்ல சொல்றாங்கனும் பாதுகாப்பு கேட்டும் பெட்டிஷன் போட்டாரு. அதுக்கு யோசிச்சு யோசிச்சு 2010ல தீர்ப்பு சொல்லிச்சு கோர்ட்டு- இதெல்லாம் மாவட்ட கோர்ட்டுல பாருங்கனுட்ட்டு.இப்ப ஞானசேகரன் ந்க்கிற எஸ்.ஐ இப்ப மதுர ஹைகோர்டுல இருக்கார். ராமசாமி சிவகாசில. தனுஷ்கோடி தான் ரத்த கேன்சர் வந்து போயிட்டார். போஸ்ட் மார்ட்டம் பண்ண டாக்டர் செத்துட்டார்.

முழுசா 13 வருஷம். அந்த மூணு திருடங்களும் ரெண்டு வருஷத்துல ஜெயில்ல இருந்துட்டு வெளியே வந்துட்டாங்க. பஞ்சம்மா, அவ பொண்ணு நல்லாருக்காங்க. ஆனா எம் புருஷன்?” நீண்ட நேரத்துக்கு அமைதியாக இருக்கிறார். கண்கள் இப்போது வறண்டு இருக்கிறது. என் கைகள் அவர் கையை பற்றுகிறது. பாளம் விழுந்து, வறண்ட லேசாக வீங்கிய கையது.
“தொடுறியா? ஆனா எனக்கு உணர்ச்சி இல்லயே? லேசான குரலில் தான் சொல்கிறார்.
அவர் என்னை மட்டும் சொல்லவில்லை என்பது மட்டும் புரிகிறது.

மேலும வாசிங்க...

நூலிழை இறகுகள்:

>> Monday, 19 September 2011

”பிரியாணி மட்டுந்தான் இருக்கு சார். வான் கோழி, பிஷ்ஷு, மட்டனு,காடை”சர்வர் சொன்னதும் சரவணன் காளீஸ்வரன் சித்தப்பா முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து “ரெண்டு சிக்கன் கொண்டு வாங்க என்றான். சித்தப்பாவுடன் ஊரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிரியாணி சாப்பிட்ட ஞாபகம் வந்தது.. அப்போது தாஜ் ஹோட்டல் பிரியாணி தான் ஊரில் பிரபலம். ஒவ்வொரு சனிக்கிழமை மத்தியானமும் சரவணனை கேரியரில் இரண்டு பக்கமும் கால் போட்டு உட்காருகிற மாதிரி உட்கார வைத்து விட்டு ”உள்ள விட்டுறாதடா” என்று ஒவ்வொரு மிதிக்கும் சொல்லுவார். அந்த வார்த்தை ஒவ்வொண்ணும் அவர் மிதிக்கும் போது சத்தமாய் வெளிவரும் மூச்சுக் காற்றில் பஸ்பமாவது போல் தோன்றும் சரவணனுக்கு.

சித்தப்பா பிரியாணியை சாதாரணமாக சாப்பிடுவாரில்லை. அரைப்பிளேட் பிரியாணி ஆர்டர் செய்து விட்டு கழுவிய கைப்பக்க சட்டையை மடித்து விட்டு முழங்கைக்கு மேல் ஏத்தி விட்டுக் கொள்வார்.பிரியாணி வந்ததும் அதை இலையில் தட்ட அவர் ஒருபோதும் சம்மதித்ததில்லை. அப்படியே வச்சிடு என்று இடது கையால் இலையை மூடிக் கொண்டு சமிக்ஞை செய்வார்.வலது பக்கமாய் பிரியாணி ப்ளேட்டை அவர் வைத்துக் கொண்டு அதில் கொஞ்சத்தை மட்டும் இலையில் தட்டுவார். ஒவ்வொரு வாய்க்கும் பச்சடி ஒரு தரம் என்றும் இலை ஓரமாய் ஊற்றிய குருமா ஒரு தரம் என்றும் முறை மாறாமல் அவர் கைகள் போகும், இரண்டு வாய்க்கு இடைஇடையே கோழிக்கறியை ஒரு கடி. தப்பித்தவறி கோழிச்சாறு கடைவாயில் வழிந்தால் அப்பவே சர்வரைப் பார்த்து டிஷ்யூ இருக்கா என்று சித்தப்பா கேட்பார். அதை உச்சரிக்கவே தவறிய சர்வரை அவர் “மெட்ராஸ்லலாம் கைத்தொடைக்க வாய்த்தொடைக்க அதான் வைக்கிறாங்கப்பா”என்பார். அந்த உரையாடலின் கடைசியில் வைக்கப்படும் “ப்பா” அந்த சர்வரை சித்தப்பா பக்கம் வர வைத்தது. “வொயிட் ரைஸ் வேணுமா சார்? என்று கேட்டு சித்தப்பா மறுக்க மறுக்க இலையில் சாதம் வைத்து மட்டன் குழம்பு ஊற்றுவார்.

அதற்கடுத்த முறை அந்த சர்வர் சித்தப்பாவின் நண்பராகவே ஆகி விட்டார்.அந்த வாரம் பிரியாணியோடு குடல்.மூளை என்று இத்தியாதி கூட்டு வகைகளோடு சாப்பிட்ட ஞாபகம் இருக்கிறது. அதுதான் சரவணன் மூளையை சாப்பிட்ட முதலும் கடைசியுமான நாள். “நல்லா சாப்பிட சொல்லுங்கண்ணே” என்றார் சர்வர். ”ஆமால…சாப்பிடு…மூளை வளரும்”என்று சித்தப்பா சிரித்தார்.. சரவணன் வாய்க்குள் மூளை கொழ கொழ என்று ருசிக்கும் அப்பாற்பட்ட ஒரு உணர்வை ஏற்படுத்தியதில் அவனால் அடுத்த வாயை சாப்பிட முடியவில்லை.”என்னலே புடிக்கலையா?”என்றபடி இவன் இலையில் உள்ளதை குழம்புக் கரண்டியால் எடுத்து அவர் இலையில் வைத்துக் கொண்டார். “மூளைப் பிடிக்காத பயலா இருப்பான் போலிருக்கே அண்ணாச்சி”என்று சர்வர் சொன்னதுக்கு சிரித்ததற்காய் சித்தப்பாவிடம் இவன் ஒரு மாதம் பேசாமல் இருந்திருக்கிறான்.

அந்த ஒரு மாசம் கழித்து சனிக்கிழமை சித்தப்பா மறுபடி அதே ஹோட்டலுக்குப் போகும் போது இவன் வாசலில் கைப்பிடித்து பக்கது நியாஸ் ஹோட்டலைக் காட்டி அங்க போவோமா என்றான். “அட..அவரு சும்மா ஜாலிக்கு சொன்னாருடா.. வா அதெல்லாம் ஒண்ணுஞ் சொல்ல மாட்டார் என்றார். இந்த தடவை சர்வரின் பெயரை “அபு”என்று சொல்லி சித்தப்பா கூப்பிட்டதும் அபூ சித்தப்பாவுக்கு கேட்காமலே ஒரு ப்ளேட் ஈரல், ஒரு ஒன் சைட் ஆம்லெட் போட்டதும் ஆச்சர்யமாய் இருந்தது.”உனக்கென்னடா வேணும் “என்று அபூ வாஞ்ஞையாய் இவனிடம் கேட்டார்.”ச்சும்மா விளையாட்டுக்கு சொன்னதுக்கு கோச்சிக்கிட்டியாமே…”என்று சொன்னபோது சித்தப்பா அபூவிடம் கண்ணைக் காட்டியதை இவன் பார்த்து விட்டான். சாப்பிட்டு முடித்த பிறகு சுடச்சுட சம்சா ஒன்றை அபூ தந்தார். “வேணாம்”னு சொல்ல வாய் எடுத்தவன் அதன் வாசத்தாலும் சூட்டாலும் ஈர்க்கப்பட்டு லபக்கென்று கடித்தான். “நல்லருக்காடா”என்றார் சித்தப்பா.

சின்னத் தாளில் பில் கொண்டு வைத்ததும் முதலில் சித்தப்பா அபூவுக்கு ஒரு முழு பத்து ரூபா தாளை நீட்டினார். அபூ அதை வாங்கி அவசரமாக பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பில் தொகை அதிகமாய் இருக்குமென சரவணன் நினைத்தான். தொண்டை வரை நிறைந்திருந்த சம்சா அப்படியே நினைக்க வைத்தது. சித்தப்பா பில்லை எட்டிப் பார்த்து ”ஒண்ணும் பிரச்னை இல்லியே?” என்று கேட்டார். ”ச்ச..அதெல்லாம் என்ன? உங்களுக்கு இல்லாமயா? நீங்க ஸ்பெஷல்லே?”என்றார் அபூ. எடுக்காமல் போன பில்லை எட்டிப் பார்த்த போது அதில் ஒரு அரை ப்ளேட் பிரியாணிக்கும் ஒரு கால் ப்ளேட் பிரியாணிக்குமான காசு மட்டும் போட்டிருந்தது. சரவணனுக்கு ஒரு நிமிஷம் சித்தப்பாவைப் பிடிக்காமல் போனது.
பிரியாணி சாப்பிட்டு விட்டு பில்லோடு வைக்கப்படும் கருஞ்சீரகத்தை சித்தப்பா நாசூக்காய் சவைக்க ஆரம்பித்தார். “ சித்தப்பா?”என்றான் இவன்.

“என்னங்கடா?”

“பில்லுல ஈரல் ஆம்லெட்லாம் இல்ல பாருங்க?”

சித்தப்பாவின் முகம் ஒரு நிமிஷம் கடுப்பாகி“ அது போன வாரம் சில்லரை வாங்காம போயிட்டேன்ல” என்று சமாதானமான ஒரு குரலில் சொன்னார். இருவரும் பேசாமலேயே வெளியே வந்தார்கள். இவர்கள் எழுந்த அறையின் மின்விசிறியை அபூ
அணிப்பதன் மூலம் அந்தக் கடகட சத்தம் மெள்ள மெள்ள அமுங்குவதும் உட்கார்ந்திருந்த நாற்காலியை மேஜைக்கடியில் தள்ளுவதுமான முனங்கல் ஒலி கேட்டது. எல்லாமே
சித்தப்பாவுக்கும் அபூவுக்குமான ரகசியங்களின் மெளன சாட்சியாக இருப்பதாய்
இவனுக்குத் தோன்றிற்று.

தனக்கு ரொம்பவும் பிடித்த சித்தப்பாவை ஒரு பிரியாணி பிடிக்காமல் செய்து
விட்டதாகவே இவனுக்குத் தோன்றிற்று. வரும் வழியில் கோவில் வாசலில்
சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு இருட்டுக் கடையில் கால் கிலோ அல்வா வாங்கிக்
வந்தார். கையில் வாழை இலையில் வழுக்க வழுக்க ஐம்பது அல்வா. கவரை ஹேண்டில் பாரில் மாட்டியப் படி “சாப்பிடுல”என்றார்.

“வேணாம் சித்தப்பா” என்றவன் திடீரென பூங்கொடி மிஸ்ஸைப் பார்த்ததும் “குட் ஈவ்னிங் மிஸ் “என்றான். பூங்கொடி மிஸ் திரும்பி இவனைப் பார்த்து “என்ன சரவணப்பெருமாள்? அல்வா சாப்பிடுறியா? அப்பா கூட எங்க வந்தே? என்றார் இவன் கன்னத்தைத் தட்டி. இவனுக்கு பூங்கொடி மிஸ்ஸுக்கு மிக நெருக்கமாக இருக்கும் உணர்வு வந்தது.”நான் சரவணன் அப்பா இல்லீங்க…சித்தப்பா”என்றார் சித்தப்பா. பூங்கொடி மிஸ் அச்சோ அச்சோ என்றபடி சிரித்தார். அவளுடன் வந்தவர் அல்வா வாங்க வரிசையில் நின்று சிரமப்பட்டதைப் பார்த்த சித்தப்பா “எவ்ளோ வேணும்?”என்றபடி முன்னால் விரைந்தார். முன்னால் போய்க் கொண்டிருந்த சித்தப்பாவுக்குக் கேட்கிற மாதிரி பூங்கொடி மிஸ் “அரைக் கிலோ போறும்”என்று காற்றுக்கும் முன்னால் சித்தப்பாவிடம் சொல்வது போல் ஒரு விதமான வேகத்தோடு சொன்னார்.

நெடிய போராட்டத்திற்குப் பிறகு நாட்டை மீட்டு வந்த அரசன் போல் சித்தப்பா நெடிய பெருமூச்சுகளுக்கு மத்தியில் அல்வா வாங்கி வந்தார். இரும்பு ப்ரேம் போட்ட சைக்கிள் கேரியரில் உட்கார்ந்தே இருந்ததால் டிராயர் அழுந்தியது இவனுக்கு.ஆனாலும் மிஸ் முன்னால் எழுந்து அதை இழுத்து விடக் கூச்சமாய் இருக்கவே லேசான வலியோடு அசைந்து உட்கார்ந்து கொண்டான்.மிஸ் சித்தப்பாவுக்கு அவரது அப்பாவை அறிமுகப்படுத்தியபடி அல்வா வாங்கிக் கொடுத்ததுக்கு ஆயிரம் தாங்க்ஸ் சொன்னார்.

அப்போதுதான் சித்தப்பா அதைக் கேட்டார்.

“சரவணன் எப்படி படிக்கான்? நல்ல பயலா இருக்கானா?”

பூங்கொடி மிஸ் இவனைப் பார்த்துக் கள்ளசிரிப்பு சிரித்து “படிக்கான்..வீட்டுல கவனிக்க மாட்டீங்களா? ஹோம் வொர்க் செல நாள் பண்றதில்ல” என்றார்.

“அப்படியால…கேட்டா செஞ்சிட்டேன் செஞ்சிட்டேன்னு சொல்லிடுதானே” என்ற சித்தப்பா “இனிம நான் பாத்துக்குறேன் மிஸ்” என்றார். இவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. கழுகு படம் பார்த்துட்டு ஒரே ஒரு நாள் ஹோம் வொர்க் செய்யாமல் போனதுக்கு பூங்கொடி மிஸ் இப்படி போட்டுக் கொடுக்கணுமா?

வர்ற வழி முழுதும் சித்தப்பா இவனுக்கு நிறைய அறிவுரைகள் சொல்லிக் கொண்டே வந்தார். தொண்டர் சந்நிதி முக்கு வரைக்கும்தான் இவனுக்கு ஞாபகம் இருந்தது. அதற்கு பிற்கு தூங்கி விட்டான்.வீட்டுக்கு வந்து சித்தப்பா மிஸ் சொன்னதாக சொல்லியவற்றை சொன்னதால் அப்பா இடுப்புக்குக் கீழே இரண்டு அடி அடித்தார். கேரியர் அழுத்திய வலி மறைந்து போய் இப்போது அப்பா அடித்தது வார் வாராய் விழுந்து கிடந்தது.அம்மா சாயங்காலம் காம்பெளண்ட் சுவர் வழியாய் பின்வீட்டு பாத்திமா அம்மாவிடம் சித்தப்பா தேவையில்லாமல் இவனைப் பற்றி போட்டுக் கொடுத்து அடி வாங்கிக் கொடுத்ததாய் ரகசியமாய் சொன்னது இவனுக்குப் பெரிய ஆறுதலாய் இருந்தது.

அப்பா சொன்னதாய்ச் சொல்லி சித்தப்பா இவன் ஹோம் வொர்க்கில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். வாரம் ஒரு நாள் ஸ்கூலுக்கு வந்து பூங்கொடி மிஸ்சிடம் பாடம் சம்பந்தமான விவரங்களையும் சரவணன் அந்த வார ஸ்கூலில் எப்படி நடந்து கொண்டான் என்ற விவரங்களையும் கேட்டுக் கொண்டார். பையன் படிப்பின் மேல் தம்பி கொள்ளும் அக்கறையால் அப்பா சிலிர்த்துப் போனார். சித்தப்பா எந்த நாளில் நேரத்தில் ஸ்கூலுக்கு வருவார் என்று தெரியாமல் மத்தியான சாப்பாட்டு நேரத்திலேயே கைக்கடிகார ஜவ்வு மிட்டாயையும் நெல்லி ஊறுகாயையும் வாங்க வேண்டியதாயிற்று இவனுக்கு. பூங்கொடி மிஸ் ”உங்க சித்தப்பா கீழப் போட்டுட்டுப் போயிட்டார்”என்று கொடுத்த கைக்குட்டையில் புதுத் துணிக்கான வாசம் இருந்தது. பிரித்தபோது ஓரத்தில் காளீஸ்வரன் என்று எம்பிராயிடரி போட்டிருந்தது.
இவன் மெனக்கட்டு அதை அம்மாவிடம் கொடுத்து,”மிஸ் சித்தப்பாட்ட கொடுக்க சொல்லிச்சிம்மா? என்றான். அம்மா அன்றைக்கு முழுக்க மசாலா அரைத்ததிலிருந்து துணி பிழிந்து கொல்லைப் பக்கமாய் காயப்போடும் வரை ”எம்புள்ளய குறை சொல்லிக் கூத்தடிக்கிறவன் உருப்படவா போறான்?”என்று புலம்பித் தள்ளி சாயங்காலம் அப்பா வந்ததும் கொழுந்தங்கிட்ட சரவணன் மிஸ் கொடுக்க சொன்னாவளாம் என்று கிசுகிசுத்தாள். அப்பா அதை பெரிசா எடுத்துக்காமல் ”நீ கொடுத்து தொலையறதுதானட்டி?” என்றார்.சரவணன் சித்தப்பா அன்று லேட்டாக வந்தார்.முகம் பேயறைந்த மாதிரி இருந்தது. அப்பா வரிடம் சாப்பிடியால என்றார். அவர் வெறுமனே “ ம் ” கொட்டி உள்ளே போன போது ”ஸ்கூல்ல கைக்குட்டை வுட்டுட்டு வந்துட்டியால? சரவணன் டீச்சர் எடுத்து கொடுத்து வுட்டிருக்கு”னு சொன்னார்.

சித்தப்பா முகத்தில் ஒரு நிமிஷம் பல விதமான உணர்வுகள் தெரிந்தன. விளக்கிலிருந்து கழற்றின மாலையில் புதுப் பூவின் மிஞ்சிய வாசமும் காய்ந்த இதழ்களின் மணமும் சேர்ந்து இருப்பது போல சித்தப்பா குழப்பமாய் அந்த கைக்குட்டையை வாங்கிக் கொண்டது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது.. அதற்குப் பிறகு பூங்கொடி மிஸ்ஸின் டிரெஸை வைத்தே அன்று சித்தப்பா ஸ்கூலுக்கு வருவாரா மாட்டாரா என்று தெரிந்து கொள்ள முடிந்தது இவனால். சித்தப்பா வரும் நாட்களில் மிஸ் கொண்டையை சுற்றி பூ வைத்து அதன் ஒரு நுனி வலது கழுத்துப் பக்கம் வருமாறு விட்டிருந்தாள்.அன்று மட்டும் மிக நேர்த்தியாக உடுத்தியிருந்தார்.
ஒருகட்டத்தில் இந்த மர்மம் நிறைந்த காதல் கதை இவனை சுவாரஸ்யப்படுத்தவே செய்தது. பூங்கொடி மிஸ் இவன் மேல் பிரத்யேக அன்பு செலுத்த ஆரம்பித்தது பசங்களுக்கு வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்து “இவன் பூங்கொடி மிஸ் ஆளுல்ல?”என்று சிரித்தார்கள். இவனுக்கு அது பெருத்த அவமானமாக இருந்தது..”இனி நீ ஸ்கூலுக்கு வராத சித்தப்பா”என்று சொல்லி விடத் துடித்தான்..அதற்காகவே சித்தப்பாவுடன் தனியாக இருக்கும் நேரங்களைத் தேடினான். சித்தப்பா வெளியே போகும் போதெல்லாம் “நானும் வர்றேன்லா”என்ற படியே இருந்தான்.

“ஏறுல”என்று ஒரு நாள் சித்தப்பா சிரித்தபடி சொன்னார். எப்ப சொல்ல நினைத்ததை நாசூக்காக சொல்லலாம் என்று இவன் எதிர்பார்த்தப்டியே இருந்தான். வசந்தி மிஸ் கிண்டலாய் சொன்னாள் என்று கதை கட்டி விடலாமா என்று கூட தோன்றிற்று இவனுக்கு. சித்தப்பா ஒரு பழைய கட்டிடத்துக்குள் இவனைக் கூட்டிப் போனார். அதுவரை அந்த கட்டடத்தை அவன் அந்த ஊரில் பார்த்ததே இல்லை. சினிமா பட போஸ்டர் மாதிரி நிறைய போஸ்டர்கள் வெளிச்சுவரில் இருந்தன, எல்லா போஸ்டரிலும் ஒரு அரிவாள் படம் இருந்தது. சித்தப்பா எதிர்ப்பட்ட எல்லாரிடமும் “என் அண்ணன் மகன்” என்றபடி இருந்தார்.

உள்ளே அவனை உட்கார வைத்து விட்டுப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். ஒரு பெண் அவசர அவசரமாக உள்ளே வந்து “ஹேய்…யாருய்யா இது ? என்றது. சித்தப்பா பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது”இரு இரு வந்துடுறேன்”என்றபடி உள்ளே ஓடினார். ஐந்து நிமிடங்களில் நனைந்த கால்களில் புடவை படாத படி ”கூட லேடீஸ் வாராங்களே அவங்க பாத்ரூம் போகணுமேனு எவனும் யோசிக்க மாட்டேங்கிறான் தோழர். சுவர் இருக்கிற தைரியம் ஆம்பளைங்களுக்கு “என்றவர் “அது சரி..இது யாரு”என்றார். சித்தப்பா மறுபடி என் அண்ணன் பையன் என்றார். அவர் மெளனமாக இவனைப் பார்த்து “சித்தப்பா கூட பவனி வந்தியாக்கும் “என்றார்.

“நீங்களும் வாங்களேன் செல்வி, தாஜ்ல பிரியாணி சாப்பிட்டு வரலாம்” என்றார் சித்தப்பா. அவர் ஏதோ நாகரிகத்துக்காக கேட்கிறார் என்றுதான் இவன் நினைத்தான். ஆனால் செல்வி அப்படி நினைக்காமல் கிளம்ப ஆரம்பித்தது ஆச்சர்யமாய் இருந்தது. செல்வி சிந்துபூந்துறை வழியாக நடந்து வர இவனைக் கேரியரில் உட்கார வைத்து சித்தப்பா உருட்டினார்.
ஹோட்டலுள் நுழைந்ததும் அபூ சித்தப்பாவைப் பார்த்து நக்கலாக சிரித்தபடி “மைனியா? என்று ரகசியமாய் கேட்டது இவனுக்கும் கேட்டது.பூங்கொடி டீச்சர் இப்ப இங்கே பிரியாணி சாப்பிட வரணும் போலிருந்தது இவனுக்கு. இவனால் பெரிதாய் ஒன்றும் சாப்பிடவோ பேசவோ முடியவில்லை. “சமர்த்தாருக்கானே” என்று செல்வி இவன் கன்னத்தைத் தட்டிய போது முகம் துடைப்பது போல் அந்த ஸ்பரிசத்தை அழித்தான்.

“ருசியாருக்கு ருசியாருக்கு என்றபடியே செல்வி கோழி எலும்பை நறநறநக்கென்று கடித்து துப்பினார்.சித்தப்பா அதைக் காணப் பிடிக்காமல் அவ்வப்போது முகத்தை திருப்பிக் கொண்டார். கடைசியில் அபூ சம்சா தந்த போது இவன் வேண்டாம் என்றான். ”தாஜ் ஹோட்டல் சம்சாவை வேணாம்னு சொல்லாத தம்பி”என்று சொன்ன செல்வி அதை பேப்பரில் மடக்கி ஹேண்ட் பேக்கினுள் வைத்தார்..அபூ சித்தப்பாவிடமிருந்து இருபது ரூபாய் வாங்கிக் கொண்டு பில் கொடுத்தார்.இவன் விரைவாக படிக்கட்டில் இறங்கி வெளியே வந்து சைக்கிள் பக்கமாய் நின்று கொண்டான்.

அவர்கள் இருவரும் வெளியே வந்து “போலாமா?”என்றார்கள் இவனிடம் . செல்வி சித்தப்பாவைப் பார்த்து “ரொம்ப நாள் கழிச்சு திருப்தியா சாப்பிட்டேன் உங்க கூட “ என்றார். சித்தப்பா ”அதுக்கென்ன” என்றார். இருவரும் அங்கேயே வெயிலில் நின்று ஏதோ கூட்டம் பற்றிப் பேசினார்கள். இவனுக்கு ஒன்றுக்குப் போக வேண்டும் போலிருந்தது. ஹோட்டல் பக்கவாட்டிலிருந்த மடையில் இருந்த போது செல்வி பார்க்கிறாரா என்று திரும்பிப் பார்த்தான் . “சுவர் இருக்கிற தைரியம் ஆம்பிளைங்களுக்கு என்று சொன்னது மாறி மடை இருக்கிற தைரியம் ஆம்பிளைங்களுக்கு என்று சொல்லி விடுவாளோ என்று தோன்றிற்று. தான் பெரியவன் ஆனா காதலிக்கவே கூடாது என்றும் சித்தப்பா மாதிரி இரண்டு பெண்களை ஏமாற்றவே கூடாதென்றும் தோன்றிற்று.

அடுத்த வாரமே சித்தப்பாவை போலீஸ் கைது செய்தது. கட்சில இருந்தா இதெல்லாம் சகஜம்தாண்டி என்று அப்பா சாதாரணமாக சொன்னார். ஆனால் அம்மாவோட அப்பா தாத்தா இவனைத் தனியாகக் கூட்டிட்டுப் போய் ”சித்தப்பா கூட இனி தனியாலாம் போகக் கூடாது” என்று சொல்லி நாலணாவும் தேன் மிட்டாயும் வாங்கிக் கொடுத்தார். யோசித்தால் அதெல்லாம் அம்மாவின் வரிகளாக தோன்றுகிறது இவனுக்கு.

சித்தப்பா வெளியே வந்தபிறகு நிறைய மாறுதல் ஏற்பட்டது. அப்பாவைத் தவிர வேறு யாரும் அவரிடம் சகஜமாக பேசவில்லை. பூங்கொடி மிஸ்ஸிடம் அவர் “கட்சியை எப்டிம்மா விட முடியும்”என்று சமாதானம் சொல்லியும் “இல்ல…இதெல்லாம் சரி வராது “என்று சொல்லி மிஸ் அழுதது வாசலுக்கு வெளியே நின்ற இவனுக்கும் கேட்டது..சித்தப்பா பிறகாய் ஸ்கூலுக்கு வரவேயில்லை.அடுத்த முழு ஆண்டு பரீட்சையின் போது கடைசியாய் பூங்கொடி மிஸ்ஸைப் பார்த்தது. கும்பகோணத்தில் கல்யாணமானதாய் ஜூன் மாசம் ஸ்கூலுக்குப் போனபோது பேசிக் கொண்டார்கள். சித்தப்பாவிடம் சாயங்காலம் சொல்லவா வேண்டாமா என்று நினைத்தபடியே சொன்னான். ”தெரியும்”என்று ஒத்த வார்த்தையில் நிறுத்திக் கொண்டு சத்தமாக ஏதோ பாட்டுப் பாடினார். சித்தப்பாவைப் பார்க்க பாவமாக இருந்தது இவனுக்கு.

சித்தப்பாவுக்கு அப்பா தீவிரமாக பெண் பார்க்க தொடங்கினார்கள். அம்மா வாரம் ஒரு முறை நகையெல்லாம் போட்டுக் கொண்டு பெண் பார்த்து வந்தார். எல்லா பெண்களையும் சித்தப்பா பிடிக்கலனு சொல்லிக் கொண்டே வந்ததில் அப்பாவுக்கு எரிச்சலாயிற்று. ”மனசுல யாரையாச்சும் வச்சிருந்தா சொல்லித் தொலை”என்றார்.

“அதெல்லாம் இல்ல” என்ற சித்தப்பா அடுத்த வாரம் அம்மா பார்க்கப்போனப் பெண்ணை போட்டோ கூடப் பார்க்காமல் சரி என்றார். இவனுக்கு செல்வி பத்தி கேட்க நுனி நாக்கு வரைக்கும் தோன்றியும் கேட்காமலே இருந்து விட்டான். கல்யாணத்தன்னிக்கு சித்தியைப் பார்த்தால் முள்ளும் மலரும் ஷோபா மாதிரி தெரிந்தது. சித்தப்பாவுடன் ராயல் டாக்கீசில் அந்தப் படம் பார்த்த ஞாபகமும் இண்ட்ரவலில் அவர் வாங்கிக் கொடுத்த முறுக்கு வாசமும் ஞாபகம் வந்தது. கல்யாணத்துக்கு கட்சியிலிருந்து வந்தவர்களோடு செல்வியும் வந்திருந்தார் .கைத்தறிப் புடவையில் முகம் முழுக்க வேர்வையில் அவர் சிரித்த மாதிரி நடிப்பது போலிருந்தது. அவசர அவசரமாக சித்தப்பாவுக்கு வாழ்த்து சொன்ன பிறகு வர்றேன் என்றார், இவனைப் பார்த்து.”போட்டோ எடுத்துக்கோங்க “என்றார் யாரோ. இருக்கட்டும் என்றபடி அவசரமாக வெளியேறின செல்வி தூசு விழுந்திடுச்சி என்று போய் சொல்லி அழுதிருக்கலாம்.அபூ கூட கல்யாணத்திற்கு வந்திருந்தார்.காய போட்டு விருந்து வச்சிட்டீக. இல்லனா பிரியாணி போட்டு ஜமாய்ச்சிருக்கலாம்னு சொல்லிக்கிட்டே ஒரு கவர் எடுத்து சித்தப்பா கையில் கொடுத்து விட்டு போட்டோவில் நிற்க தயாரானார்.

அந்த போட்டோ இன்னும் சித்தப்பா வீட்டு டிவி மேல் இருக்கிறது..தாஜ் ஹோட்டலை மூடிய பிறகு அபூ எங்கே என்று தெரியாமலே போனது.மூன்று பெண்குழந்தைகள் ஆன பிறகு நாற்பதாவது வயதில் சித்தி கர்ப்பப்பை கான்சரில் இறந்து போனாள். சித்தப்பா அழுது இவன் பார்த்தது அன்றுதான். அவருக்கும் சித்திக்கும் இடையில் பேசப்படாத ஒரு ப்ரியம் இருந்திருப்பதை தான் கவனிக்காமல் விட்டதை நினைத்து இவன் மருகினான். மூத்த பெண்ணுக்கான டீச்சர் டிரெயினிங் சீட்டுக்கு இவனையும் கூட வர சொல்லி சித்தப்பா போன் செய்தார்.

டிரெயினிங் கல்லூரியில் பீஸ் கட்டிய போது சித்தப்பாவிடம் ஐநூறு ரூபாய் கம்மியாயிருந்தது. இவன் ஆயிரம் ரூபாயை அவரிடம் நீட்டினான்.”பீஸ்னு ஒரு தொகை போட்டுட்டு டாக்ஸ் அது இதுனு இங்க வந்தா கூட போடுறாகல” என்றார். மீதியை பாக்கெட்டில் வைத்த படி “சாப்பிடலாமா?”என்றார்.

எதிரே இருந்த ஹோட்டலில் நுழைந்த போது அங்கு பிரியாணியைத் தவிர ஏதுமில்லை. சித்தப்பாவுக்கும் தனக்கும் பிரியாணிக்கும் ஏதோ ஒரு பூர்வ ஜென்ம தொடர்பு இருப்பதாகவே தோன்றிற்று இவனுக்கு. ”இப்பல்லாம் அரை ப்ளேட்டுனுலாம் இல்ல”என்றார் அவராகவே.ஒரு வெங்கல கிண்ணத்தில் வந்த பிரியாணியை அவர் ப்ளேட்டில் தட்டி குனிந்தபடியே சாப்பிட்டார்.பச்சடியை எப்போதாவது தொட்டுக் கொண்டார். குழம்பு பாத்திரத்தை அவர் தொடவே இல்லை. “குழம்பு சித்தப்பா?”என்றான் இவன்,”வேணாம்ப்பா:என்று மறுத்து இடது கையை மறித்தார். மளமளவெனச் சாப்பிட்டு இவனுக்கு முன்பாகவே கைகழுவி விட்டு உட்கார்ந்தார். மேஜையின் மீது ஒரு இரும்பு ஸ்டாண்டில் டிஷ்யூ பேப்பர் இருந்தது.
சாப்பிட்டு முடித்தும் அதை எடுக்கவில்லை அவர்.

ன்றி:ஆனந்த விகடன்



.

மேலும வாசிங்க...

ஒரு முன்னுரை :

>> Thursday, 1 September 2011



அரசியல் தெரியாத எனக்கு
பதவியிலிருப்பவர்களின் பெயர் தெரியும்.
நேருவில் ஆரம்பிக்கும் அப்பட்டியலை
என்னால் வார,மாத பட்டியல்
போல பட்டியிலிட முடியாது.
இந்தியாவில் மலபாரில் பிறந்த
கோதுமை நிறத்துப் பெண்ணாய்
மூன்று மொழி பேசி
இரண்டில் எழுதி
ஒன்றில் கனவு காண முடிகிறது என்னால்…

ஆங்கிலத்தில் எழுதி விடாதே
என்று அன்போடு எச்சரித்தார்கள்
ஆங்கிலம் உன் தாய்மொழியில்லை
என்னை தனிமையோடு
இருக்க விட மாட்டீர்களா?
விமர்சகர்கள்,நண்பர்கள்,சொந்தங்கள்,எல்லாருமே….
என் மொழியை நான் தீர்மானிக்கிறேன்.
நான் பேசும் மொழி எனதாகுது.
அதன் தாளங்கள் அபஸ்வரங்கள்
எல்லாம் எனதாகின்றன.
எனது மட்டுமாய்…
பாதி ஆங்கிலமும் பாதி இந்தியதுடனும்
நகைப்பாய் இருக்கலாம்
எனினும் அது உண்மையானது.
என்னின் மனிதத்துவம்
அதிலும் மிளிர்கிறது

என் சந்தோஷங்களின் எதிரொலியாய்,
என் தாகங்களின் ஈரமாய்
என் கனவுகளின் நிழலாய்
ஒரு காக்கையின் கரையும் குரலாய்
ஒரு சிங்கத்தின் கர்ஜனையாய்
என் மனிதத்தின் மொழியாகுது .
என் மனதின் மொழியாய்
அது கண்டு கேட்டு உணர்கிறது.

மரங்களின் கிசுகிசுப்பையோ
மேகங்களின் பிசுப்பிசுப்பையோ
இறந்த உடலை வெறியோடு கவ்வும் தீயின் சத்தத்தை பார்க்காமலோ கேட்கப்படாமலோ
இல்லை என் மொழி.
அப்போது நான் குழந்தையாய் இருந்தேன்.
என் உயரம் கூடிய போது
என் உறுப்பு வீங்கிய போது
இரண்டு மூன்று இடங்களில்
ரோமங்கள் முளைத்த போதும்
நான் வளர்ந்ததாஉ அவர்கள் சொன்னார்கள்

கேட்பதற்கு வேறொன்றும் இல்லாமல்
அன்பைக் கேட்டபோது
பதினாறாவது வயது படுக்கையறைக்குள்
அவன் என்னை அழைத்து சென்று
கதவை சாத்தினான்.
என்னை அவன் அடிக்கவில்லையெனினும்
என்னுடல் அடிக்கப்பட்டதாய் உணர்ந்தது.
மார்பின் கனமும் கர்ப்பமும்
என்னை பரிதாபமாய் சுருக்கி
சிதைத்தப்படியே இருந்தன.
அதன் பிறகே நான் மேல்சட்டையும்
என் தம்பியின் பேண்டையும் அணிந்து
முடியைக் கட்டையாய் வெட்டிக் கொண்டு
என் பெண்மையை உதாசீனம் செய்தேன்

புடவைக் கட்டிக் கொள்
ஒரு பெண்ணாய் இரு
ஒரு மனைவியாய் இரு
என்று சொன்னார்கள்.
எம்பிராய்டரி போட்டு
சமையல் செய்து
வேலைக்காரர்களோடு சண்டை போட
நிர்பந்தம் தொடர்ந்தது அவர்களால்.

சுவர்களில் உட்கார்ந்து கொண்டோ
அலங்கார ஜன்னல் வழியாக
எட்டிப் பார்க்கவோ கண்டிப்பாக வேண்டாம்
ஏமியாகவோ கமலாவாகவோ இரு
அதிலும் மாதவிக்குட்டியாக….
பொய்யான நாடகங்கள் வேண்டாம்
மனநோய் போல் நடிக்க வேண்டாம்
உடலிச்சை அதிகமிருப்பதாக காட்ட வேண்டாம்
காதலினால் உச்சக் குரலில்
கதறவும் வேண்டாம்.

ஒரு ஆணை சந்தித்து காதலித்தும் வைத்தேன்
ஒரு பெயரல்லாமல்
பெண்ணை தேடும் ஒவ்வொரு
ஆணுக்கான எல்லா பெயர்களாலும்
அவனை அழையுங்கள்
காதலைத் தேடும் ஒவ்வொரு பெண்ணிலும்
நான் இருந்தேன்.
ஒரு நதியின் பசியடங்கா தேடல்
என்னில் இருந்தது.

கடலின் தீராத காத்திருத்தலும்.
நான் யாரென எப்போதும்
ஒவ்வொரு முறையும் கேட்கிறேன்
இதற்கான பதிலே-நான்
என்ங்கும் எப்போதும் தன்னை நானென
அழைக்குப்பவர்களை சந்திக்கிரேன்
ஒரு வாள் கச்சிதமாய் உறையுள்
பொருந்துவது போலவே
உலகத்துள் அவன் பொருந்தியுள்ளான்

நான் மட்டுமே தனியே மது அருந்துகிறேன்
நள்ளிரவில், நடுநிசியில், புதிரான நகரின் உணவகங்களில்
நானே சிரித்து, நானே புணர்ந்து
நானே வெட்கப்பட்டு,மரணத்தின்
விக்கல்களை தொண்டையில்
சுமந்தபடி இருக்கிறேன்
நானொரு பாவி
நானொரு போதிமரம்
நானொரு நேசிக்கப்படுபவள்
நானொரு ஏமாற்றப்பட்டவள்.
உனதல்லாத சந்தோஷங்கள் என்னிடமில்லை.
உனதல்லாத வலிகளும் என்னிடமில்லை
நானும் என்னை அழைக்கிரேன்
நானென்று…..

கமலாதாசின் கவிதை மொழியாக்கம்

மேலும வாசிங்க...