இத்யாதி....
>> Sunday, 22 November 2009
இத்யாதி 1....
ஒரு வாரமாக எதுவுமே எழுதவில்லை.காரணம் என்று-வேலை அதிகம்.மனசு சரியில்லை என்று ஆயிரம் சொல்லலாம். வலிமையான ஒரே காரணம் எழுதும் மனநிலை வாய்க்கவில்லை. இடையில் மெயிலிருந்து போஸ்ட் செய்யும் வசதியில் தவறுதலாக ஏதோ லாட்டரி சேதி ப்ளாக்கில் போஸ்ட் ஆகி நண்பர்கள் பின்னூட்டமும் போட்டார்கள். எதேச்சையாய் நடந்த விடயம் எனினும் பணத்துக்காக அலையும் நாட்களில் இது அமானுஷ்யமாகவே இருந்தது.
வேறென்ன? இப்படி ஏதும் லாட்டரி அடித்து விடாதா என்றே தோன்றுகிறது. இதோ இந்தப் பக்கத்தின் வலதுபுறம் இருக்கும் வீடு விளம்பரத்தை உங்களில் யாரும் பார்த்து வாங்க எத்தனித்தீர்களாயின் அதுவே எனது இந்த நிமிடத்தின் லாட்டரி.
இத்யாதி 2....
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேதனை. ப்ரச்னை எனினும் அதை எதிர்கொள்ளும் வலிமை வேறு வேறு. போன செவவாய்க்கிழமை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுத நினைத்தேன். அன்புள்ள கடவுளுக்கு என்று ஆரம்பிக்கவா என்று நெடுநேரம் யோசித்தேன். ஆரம்ப நாட்கள் முதலாகவே இழப்புகளை சுமந்த வாழ்க்கையை ஏன் எனக்கு ப்ளான் பண்ணினாய் என்று கேட்கலாம் என்று தோன்றிற்று.சில நேரங்களில் சுற்றிப் பார்க்கும் போது எல்லாருமே சந்தோஷமாக கடந்து போவது போல் தோன்றுகிறது.
அந்த மாதிரியான நேரங்களில் நல்ல பாடல்கள் கேட்கத் தோன்றுகிறது எனக்கு. இந்த வாரத்தின் ஆறுதலைத் தந்தது---கண்டேன் காதலையில் வரும் “ நான் மொழி அறிந்தேன்”
நநதலாலாவின் ”ஒண்ணுக்கொன்னு துணையிருக்கும் உலகத்துல”
அம்முவுக்குப் புரியும்.
இத்யாதி 3....
கனமான மனசூழலின் நடுதருணத்தில் சந்திராவின் அலைப்பேசி அழைப்பு வந்தது. மனமாற்றங்களுக்காக நினைவுகளை சேகரித்த மனதோடு பேசும் ஸ்நேகிதியுட்ம் என்ன சொல்ல? வழக்கம் போல் நான் மன்மோகன் பேத்தி பேசுறேன் என்றேன். சந்திரா அந்தப் பக்கம் கலகலவேன சிரித்தது என் கண் ஈரத்தில் மினுங்கிற்று. என் பேஸ்புக்கில் சந்திரா எழுதிய வரிகளில் கரைந்து போனபடி அலைந்து கொண்டிருக்கிறேன்.காற்றில் அலையும் சிறகாய்...
இத்யாதி 4....
ஒரு நாள் மதியம் ஆர்.கே நடித்த எல்லாம் அவன் செயல் படம் பார்த்தேன். கதை நன்றாகத் தானிருந்தது. வர்க்க வேறுபாடுகளின் வலியை சொல்லும் கதையில் சஸ்பென்ஸ் எலலாமே இருந்தும் ஏன் ஓடவில்லை படம் ?
ஆர்கே யாலா?
இத்யாதி 5....
தினகரன் ஞாயிறு இதழில் பா.ராகவனின் கதை பக்தன் வாசித்தேன். ராகவனின் வழக்கமான நையாண்டி நடை.பிள்ளையாரே பக்தனை நம்பி இருக்கிரார். அவரின் கோவிலை ப்ளாட்டிலிருந்து எடுத்து விட்டாலும் பக்தன அதை தடுப்பான் என்று கனவெல்லாம் கூட காண்கிறார்.கடைசியில் பக்தனை பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு கிணற்றுப் பக்கம் போகிறான். மனித மதிப்பீடுகளுக்கு கடவுளும் தப்புவதில்லை.
இனிமேல் பிள்ளையாரை பார்த்தால் ராகவனின் கதை ஞாபகம் வரும்.










