*******8
>> Monday, 6 December 2010

*.அப்போது நாங்கள் பெருமாள்புரம் ரவுண்டானா பக்கம் ஒரு வீட்டில் இருந்தோம்.அம்மாவும் பள்ளிக்கூட டீச்சராக இருந்ததால் பரீட்சை நேரம் வீட்டை மத்தியானம் பூட்டிக் கொண்டு அடுத்த நாள் பரீட்சைக்கு படித்துக் கொண்டிருந்தேன்.திடீர் என்று வாசல்பக்கம் நாலு பெண்களும் ஒரு ஆணும் வந்து நின்று கூப்பிட்டார்கள். வெறீச்சென்ற மத்தியான நேரம். தெருவில் ஆளில்லை. நான் பயந்து போய் யார் என்றேன் ஹீனமாய்.என் அம்மா தாத்தா அவர்களிடம் பத்தாயிரம் ரூபாய்கடன் வாங்கியிருக்கிறார்.அதை வாங்கிக் கொண்டு தான் போவோம் என்றபடி கதைத் திற்க்க சொன்னார்கள். யார் வந்தாலும் கதவைத் திறக்காதே என்று சொன்னதால் நான் திறக்க மறுத்தேன். அவர்கள் பெருங்கூச்சலிட்டபடி வாசல்படியிலேயே நெடுநேரம் அமர்ந்திருந்தார்கள்.அந்தப் பக்கமாய் வந்த ராபின்சன் அண்ணன் என்னும் அண்ணன் என்ன கூட்டமாய் இருக்கிறதேனு வந்துப் பார்த்து அவர்களை அனுப்பி வைத்து என்னை என் ஸ்நேகிதி தங்கம் வீட்டில் கொண்டு போய் விட்டார்."கடன்னா என்னப்பா?"என்று கேட்டதற்கு அன்றிரவு அப்பா எனக்கு ஆதரவாக தாத்தா டிஎஸ்பி யாக இருந்தப்பொழுது இருந்த செல்வ செழிப்பையும் தாத்தா காலமானப்பிறகு அவருக்கிருந்த கடன்களை அப்பா அடைத்தது பற்றியும் சென்னையில் நணபர்களின் உதவியோடு படிததையும் முன் முற்றத்தில் தெருவிளக்கின் வெளிச்சத்தில் மினுமினுத்த வேப்பமரத்தடியில் சொன்ன போது.கண்களில் மிதந்த நீரை நல்லவேளை மின்வெட்டு மறைத்து விட்டது.காலில் செருப்பில்லை என்று கவலைப்படுபவர்கள் காலில்லாதவர்களைப் பார்த்தபின் கவலையை மாற்றிக் கொள்வார்கள்.இந்தியாவுக்குக் கூட கடன் இருக்குது தெருயுமா என்று சொல்லி அப்பா என்னை சிரிக்க வைக்க முயற்சித்தார்.ராபின்சன் அண்ணன் இன்றில்லை. ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார்கள்.காரணங்கள் ஏதுமின்றி சுயலாபங்கள் இன்றி பொருளாதார ரீதியாக ,மனரீதியாக உதவுபர்களைப் பார்க்கும் போது ராபின்சன் அண்ணனின் ஞாபகம் இன்றும் வருகிறது.கடன்னா என்னனு கேள்வி கேட்டு வாழ்க்கைப் பத்தி நான் யோசிக்க ஆரம்பித்த நாள்.
*என் ஸ்நேகிதி தங்கம் வீட்டில் ஒரு பீரோ நிறைய புத்தகங்கள் வைத்திருப்பார்கள்.அவளின் அத்தைக்கு கல்யாணம் ஆகவில்லை. அந்த அததை தீவிர நா.பாவின் ரசிகை. அரவிந்தனின் கால்கள் பற்றி ஒரு நாள் முழுக்க கூட பேசிக் கொண்டே இருப்பார்கள். எனக்கு ஒரு நாள் அந்தப் புத்தகததை இரவல் தருமாறு கேட்டேன்.நிறைய யோசித்து பத்திரம் பத்திரம் என்று நூறு தடவை சொல்லி குறிஞ்சிமலரைக் கொடுத்தார்கள். ஒரு குழந்தையை தத்துக் கொடுப்பதைப் போலிருந்தது அவர்கள் செய்கை.நானும் அதை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய் இரவெல்லாம் வாசித்தேன். ஒரு புத்தகத்தை பெரும் அர்த்ததோடு வாசித்தது அன்று தான்முதல்முறை. வாசித்த போது நானும் தங்கம் அத்தை மாதிரி புத்தகம் பற்றி ம்றுநாள் நிறைய பேசணும் என்று முன்தீர்மானம் செய்து கொண்டேன்.ஆனால் வாசிக்க வாசிக்க நா.பா மாதிரி நாமும் எழுதமுடியுமா என்று தோன்ற ஆரம்பித்தது.காலையில் அப்பாவிடம் நானும் எழுதலாம்னு நினைக்கேன்ப்பா என்று சொன்னேன். அப்பா அன்று சாயங்காலம் எனக்கு பாரதியார் கவிதைகள் வாங்கித் தந்து தோணுற்தெல்லாம் எழுது என்றார்கள்.எழுத்தில் முதல் புள்ளி இங்கு தான் ஆரம்பித்தது.
விகடனில் முதல் கதை வெளியான போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.அதை வாசித்து விட்டு தங்கம் அததை ஒரு பிராமண்ப் பெண் ஒரு ஆப்பரிக்க இளைஞனைப் கட்டிக்கறாப்ல எப்படி யோசிச்சனு கேட்டாங்க.இன்று தங்கத்தோடு தொடர்பில்லை.ஆனால் ஒவ்வொரு முறை எழுத ஆரம்பிக்கும் போதும் அவள் வீட்டு பீரோவும் ஒரு குழந்தையை சுமந்தமாதிரி நா.பாவின் புத்தகததை சுமந்து போனதும் நினைவுக்கு வராமல் இருந்ததில்லை.
* விவியன் எனக்கு தம்பி மட்டுமில்லை. என் சிறுவயது நினைவுகளை பசுமையாக்குபவன். என்னத்த சமைக்குற? ஆப்பம் ஒண்ணு தான் சுமாரா செய்யுற..சரி சரி.. இன்னும் ஒண்ணு போடுனு பெருந்தன்மையா எனக்காக சாப்பிடுற மாதிரி கிட்டத்தட்ட ஒரு பதினொரு ஆப்பம் பன்னிரெண்டு ஆப்பம் சாப்பிடுவான். விவியன் ரிச்சர்ட்ஸ்ங்கிற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரின் பெயர் அவனுக்கு. விவினு வீட்டில் கூப்பிடுவோம். என்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்காக பெங்களூர் போக இருந்தவனுக்கு மஞ்சள் காமாலை வந்தது.மூலிகை மருந்து கொடுத்தோம். இரவு இடியாப்பம் சாப்பிடக் கொடுத்தபோது நீயே கொஞ்சம் கொடேன்னு சொன்னான். ஸ்பூன் வத்து அவனுக்கு கொடுத்தேன். நடுஇரவில் ரத்தமாய் வாந்தி எடுத்து ஆஸ்பத்திரியில் சேர்ந்து காலையில் இறந்து போனான். எலி காய்ச்சலாம்.இந்த இடத்தில் அரவிந்தனைப் பற்றியும் சொல்ல வேண்டும். எங்க எதிர்த்த வீட்டு ரவியண்ணனின் மகன் விடுமுறைக்கு தாத்தா பாட்டி வீட்டுக்கு வந்திருந்தான். அப்போது நான் பன்னிரெண்டாவது படிச்சிட்டு இருந்தேன். மத்தியானம் பரீட்சை இருக்கும். காலைல பூராவும் என் கூட வந்து பட்டாம்பூச்சி பிடிப்பான்.உனக்கு மட்டும் எப்படிக்கா பட்டு பட்டுனு பட்டாம்பூச்சி சிக்குதுனு கேட்டதுக்குஅதுக்கு ஒரு மந்திரம் இருக்கு.. சாயங்காலமா உங்க தாத்தாட்ட நூறு ரூவா வாங்கிட்டு வா. சொல்றேன்னு நான் விளையாட்டாக சொன்னதை உண்மைனு நம்பிட்டு சொல்லுக்கா சொல்லுக்கானு என் கூடவே பஸ் ஸடாண்ட் வரைக்கும் வந்தான்.சாயங்காலம் நான் வீட்டுக்கு வந்தபோது அவன் வீட்டின் முன் கூட்டமாய் இருந்தது. கல்வெட்டாஙுகுழி பக்கம் விளையாடியவன் கால் கழுவ இறங்கிய போது நீரில் மூழ்கி விட்டான்.பட்டாம்பூச்சிகளை பட்பட்னு பிடிக்கும் ரகசியம் என்னனு தெரிஞ்சிக்காமலேயே இறந்து போனான்.யோசிச்சு பார்த்தா நிமிடங்களில் மாறிப் போகிறது வாழ்க்கையும் உறவுகளும். இந்த நிமிடமே நிச்சயமானதுனு உணர்த்திய மரணங்கள் இவை
* படிக்கிற காலத்தில இருந்தே ஆசிரியர்களுக்கும் எனக்கும் ஏனோ ஒரு சுமுகமான உறவு இருந்ததில்லை.ஏழாம் வகுப்பில் படிக்கிறப்போவே என்னோட கணக்கு டீச்சர் யாரோ அவங்க சரியா பாடம் எடுக்கலனு பள்ளிக்குப் போட்ட மொட்டை கடுதாசியை எங்க அம்மா கணக்கு டீச்சர்ங்கிறதால அம்மா தான் எழுதிருக்கணுனு நினைச்சு என்னை டார்ச்சர் பண்ணதுலருந்து ஆரம்பிச்சது.அப்புறமா கல்லூரில ஜால்ரா அடிக்காததால இன்டர்னல் மார்க்குல கை வச்ச ஆசிரியர்களோடு நிறைய போராடி இருக்கிறேன்.இங்குள்ள பல்கலைக்கழக்கத்துல உல்ள ஒரு சில முறைகேடுகள் அதை ஆசிரியர் சங்கம் எப்படி கையாள தவறுகிறதுனு ஒரு பத்திரிகைல எழுதின சிறுகதைக்காக கையை எடுத்திருவோம்னு அனாமத்திய தொலைபேசி அழைப்புகள் வந்தன.கூட இருந்த எல்லாரும் உனக்கு இது தேவையா? அவன் இவளைக் காதலிச்சான்னு எழுதிட்டுப் போக வேண்டியது தானேனு சொல்ல ஆரம்பிச்சாங்க.அந்த நேரத்துல தான் தில் படம் பார்த்தேன். ஒரு திரைப்படம் என் வாழ்க்கையோடு இணைந்தது அது தான் முதல் முறை. கண் முன்னே நடக்கும் ஒரு அநியாயத்தை நான் எழுதுவதில் என்ன தவறு இருக்கிறது? அதுவும் ஒரு முறையான போராட்டம் தானேனு தீர்மானித்து கதை எழுதிய பத்திரிகையின் உதவியோடே அந்த ஊழல்களை வெளிச்சத்துக்கு ஆதாரத்துடன் கொண்டு வந்தேன். அதனால் பல பிரச்னைகள்.எதிர்கொள் என்கிற ஜேகேயின் புத்தகம் வாசித்ததும் இந்த காலகட்டத்தில் தான்.இன்றும் பிரச்னைகளைக் கண்டு ஒளிந்து கொள்ளாது எதிர்கொள்ளும் மனோவலிமை தருவது இந்தப் புத்தகத்தின் சாரம்சமே.பிரச்னைகளற்ற வாழ்வை யாரும் யாசிக்க முடியாது. பிரசனைகளை எதிர்கொள்ளும் திறனை யாசிக்க கலையாக்கங்களும் தத்துவ விசாரணைகளும் ஒரு கருவி என்று வாழ்க்கையிடம் கற்றுக் கொண்டேன்
*நான் அப்போது சென்னையிலிருந்தேன். விரக்திகள் ஆளற்ற ஒற்றைப்பாதையில் கண்ணில் கண்ட ஒரே நபரைத் துரத்தும் நாயாய் துரத்திய காலகட்டம். என் தோழியின் கசின் ஒருத்தி காதல் தோல்வியால் பாதிக்கப்பட்டு சேலத்தில் இருந்தாள். அவள் அம்மாவுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவளுக்கு ஒரு மனமாற்றம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நினைத்து சென்னைக்கு வர சொல்லி வேலை வாங்கிக் கொடுத்தேன்.அவளுக்காக அவள் காதலித்த பையனிடம் பேசி அவள் நிலையை சொன்னேன். அவன் தன் அவளை எந்த தருணத்திலும் காதக்கிறேன்னு சொல்லவே இல்லைனு சொல்லிட்டான்.அவளை அந்த மனசோர்விலிருந்து வெளிக்கொண்டு வர அவளோடே பெரும் பொழுதினை செலவழித்தேன். ஏன் அப்படி அக்கறை எடுத்துக் கொண்டேன்னு கேள்வியை நானே கேட்டுக் கொண்டாலும் இப்போதும் என்னிடம் பதிலில்லை.அதற்குப் பிறகு அவள் மாறிப் போனாள்.யாரோ ஆர்குட் நண்பர்னு ஒரு பையனை வீட்டுக்கு கூட்டி வந்து பேசினபடியே இருந்தாள். சாட்டில் பழக்கமானவன்னு தில்லியில் உள்ள ஒருவனோடு இரவு முழுக்க போர்வையை போர்த்திக் கொண்டு செல்போனில் பேசினாள்.நான் அவளுக்கு லேசாக எச்சரிக்கை விட்டதும் அலுவலகத்தில் என்னைப் பற்றி அசிங்கமாக, அதுவும் ஆபாசத்தின் எல்லைக்கு போய் வதந்திகளை பரப்பி விட்டாள்.அந்த நேரத்தில் இது எதுவுமே தெரியாமல் நான் உடல் நலக்குறைவால் வேலையையும் விட்டு விட்டேன். சமீபத்தில் அந்த அலுவலக தோழி ஒருத்தியை சந்தித்த போது தான் விடயம் அறிந்தேன்.உதவிகள் செய்வதிலும் அளவுகோலும் சம்பந்தப்பட்ட நபரின் மனநிலையும் அறிந்து கொள்ளவேண்டும். மட்டுமல்ல. தவறினால் உதவிகள் மனசங்கடங்களைத் தரும்.
* வானொலியில் பணியாற்ற வந்து கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஓடி விட்டன.வெகுஜன ஊடகமான இதில் என்ன யுகப்புரட்சி செய்ய முடிய்ம் என்று எனக்கும் ஆரம்பத்தில் தோன்றியிருக்கிறது.தொலைகாட்சி வந்து பிரபலமான ஒரு காலகட்டத்தில் மறுபடி வானொலி பிரபலமாகும் என்கிற கோட்பாடை அது சிதைத்து மட்டுமல்ல. மிக எளிதாக ஒவ்வொரு வீட்டு வரவேற்பரையிலும் நெடுநாளைய பழக்கத்துடன் உட்கார்ந்து கொண்டது .ஒரே நாளின் ஊரின் எல்லார் வீட்டுப் பெண்ணாய் மாறிவிட்ட அதிசயம் அது. ஒரு நாள் அலுவலகத்து ரிசப்ஷனின் யாரோ என்னைத் தேடி வந்திருப்பதாய் சொன்னார்கள். சொன்ன பெயருக்கு சொந்தமானவர் நிகழ்ச்சி தொடர்பாய் கடிதங்கள் எழுதி இருக்கிறார்.ரிச்ப்ஷனுக்குப் போன போது வேறு யாரோ இருந்தார்கள்.கொஞ்சம் வெளியே வந்து அவரை சந்திக்க வர முடியுமானு கேட்டார் அவர். கொஞ்சம் புரியாத புதிரோடு நிறைய தயக்கத்தோடு வெளியே போனேன்.ஒரு டாக்ஸி. அதனுள் அந்த மனிதர் படுத்திருந்தார். நரம்பு சம்பந்தமான வியாதியால் எழுந்து உட்கார கூட முடியாத நிலையில் சந்திக்க வேண்டும் என்று அவர் தந்தை தீபாவளிக்கு தந்த பணத்தில் துணிகள் வாங்காமல் டாக்ஸி வத்து என்னை சந்திக்க வந்ததில் நெகிழ்ந்து நின்றேன்.நிகழ்ச்சி பற்றியும் சொல்லும் கருத்துக்கள் பற்றியும் ஒரு வரி விடாது அவர் பேசினார். அப்போது தான் வானொலி ஒரு உலகம் என்பது தென்பட்டது.வெகுஜன ஊடகங்களில் பணியாற்றும் போது கூடுதல் கவனத்துடன் நம் செயல்பாடு இருக்க வேண்டியிருக்கிறது. முகம் தெரியாத மனிதர்களோடு நமக்கு ஏற்படும் புரியாத பந்தங்களிலிலும் இருக்கிறது வாழ்வின் எழுதப்படாத அர்த்தம் ஒன்று
*அப்போது நாஙகள் பாளையங்கோட்டையில் ஒரு பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தோம். தினம் பேருந்தில் போய் வருவோம். என்னை வீட்டிலிருந்து கூட்டிட்டு போய் திரும்ப வரும் பொறுப்பு ஜெயாக்காவிடம் விடப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் நான் செய்த மிகப் பெரிய சேட்டை பஸ்ஸில் டிக்கெட் வாங்காமல் பிரயாணம் செய்தது தான்.தினமும் அப்பா இன்னிக்கு டிக்கெட்டை என் கிட்ட வந்து காட்டணும்னு கட்டளை போடுவார். டிக்கெட் இல்லாமல் பிரயாணிப்பதில் ஏதோ ஒரு காரணமற்ற சந்தோஷம் அந்தக் கால கட்டத்தில் ஏற்பட்டது.ஜெயாக்காவே பிறகு எனக்காய் டிக்கெட் எடுக்குமாறும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஜெயாக்காவை ஒரு பையன் தினமும் ஃபாலோ செய்தான். உண்மையில் அக்காவுக்கு இதில் சந்தோசமும் பெருமையும் இருந்த மாதிரியே இருந்தது. ஆனாலும் அவனைப் பற்றி எங்களிடம் திட்டுவாள்.ஒரு நாள் அவன் அக்காவுக்கு ஒரு கடுதாசியில் " அன்புள்ள ஜெயா. வண்க்கம் . என் பெயர் இன்னது. உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புகிறெனு எழுதி கொடுத்தான். அக்கா கண்ண்கி ஆனாள். இவன விடக் கூடாது. எங்க அப்பாட்ட கொடுக்கணும்.னு சொன்னதும் நான் சும்மா இருக்காமல்.. விடுங்கக்கா.. பாவம். பிடிக்கலனா சொல்லிற வேண்டியது தானேனு கேட்டது தான் தாமதம்.அவங்கப்பாவிடம் சொல்லி அவனைப் பிடித்து அடித்து..ஜெயாக்காவோடு நான் பெசுவதை நிறுத்தி விட்டேன் பிறக்காய். எதற்க்காக இந்த கலாசார போராட்டம்? நம் ஊடக்கங்கள், சினிமாக்ககள் இத்தகைய காதலைத் தானே சொல்லிக் கொடுக்கிறது. அதை மறுக்க நாகரீகமான முறைகள் இருக்க இதிலும் என்ன சினிமாத்தனம்? இங்கு மட்டுமல்ல. பெரும்பாலான இடங்களில் இதுவே நடக்கிறது.அதற்குப் பிறகு ஜெயாக்காவின் முகத்தில் ஒரு பெருமிதம் தெரிந்தது..பாருய்யா என் பின்னால எத்தன பசங்க வாராங்க.. வந்தா என்ன பண்ணுவோம் தெரியுமில்லே?நேற்று கூட பேருந்தில் ஒரு பள்ளிக்கூட பையன் பக்கத்தில் உட்கார்ந்ததும் எழுந்து போகும் பாட்டியின் செயல்பாடு எனக்கு சிரிப்பைத் தந்தது.என்று ஸ்பரிசங்கள் போகவும் அறியப் போகிறோம் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும்?
Labels:
Labels:


6 comments:
எதற்க்காக இந்த கலாசார போராட்டம்? நம் ஊடக்கங்கள், சினிமாக்ககள் இத்தகைய காதலைத் தானே சொல்லிக் கொடுக்கிறது. அதை மறுக்க நாகரீகமான முறைகள் இருக்க இதிலும் என்ன சினிமாத்தனம்?
.... Good question!
மலரும் நினைவுகள் - நல்ல பகிர்வு.
one of the good post. emotionally disturbed a lot.
one of the good post. emotionally disturbed a lot.
நச்சுன்னு இருக்கு பதிவு .. உங்களோட பலமே இந்த வசீகரமான எழுத்துகள் தான் .. முடிந்த அளவு அடிகடி அதிகமாக எழுதவும்.
இப்படித்தான் சில போலீஸ் அதிகாரிகள் சொத்து சேர்க்காமல், கடனை சொத்தாக தந்து
செல்கின்றனர்; ஆனால், நாமோ, அவர்கள் அனைவரும் லஞ்சத்தில் திளைப்பதாக நினைக்கிறோம்!
இயல்பாக எழுதுவது பெரிதல்ல; மனதைத் தொடும்படி எழுதியதுதான் சிறப்பு!
Post a Comment