நந்தலாலாவின் நிழல்.
>> Tuesday, 30 November 2010


நீண்ட நாளாகி விட்டது பதிவு எழுதி.சொல்லப்படாத வார்த்தைகளின் அழகு, மவுனம் கலைக்கும் போது அவிழ்ந்து விழும் கூந்தல் போல மிளிரும். பணிசூழல் அதுஇதுவென ஆயிரம் காரணம் சொன்னாலும் சூல் கொள்ளாமல் எழுத எனக்கு சம்மதமில்லை.மூன்று நாளாய் நான் உறங்கவில்லை. கண்களை மூடினால் வெள்ளை சுண்ணாம்பு சுவர்கள்.நடுவில் என் மகன் ஓடி வருகிறான். என் கண்ணில் கண்ணீரோடு நான் அவனை நோக்கி ஓடுகிறேன். நடுவில் ஒரு நிழல் எங்களுள் விரிகிறது. அவன் என்னை விட்டுப் பின்னோக்கி ஓடுகிறான். இதற்கு மேல் என்னால் தூங்கவோ,ஏன் கண்களை தொடர்ந்து மூடக் கூட முடியவில்லை.
ஸ்படிகமாய் ஓடும் வெள்ளை நீரில் சரிந்து கிடக்கும் புற்கள். பின்னாய் குனிந்து பார்த்தபடி பள்ளிக்கு முன் நிற்கும் அவன்.அகி....மொட்டை மாடியில் நின்று இன்று காலையிலும் கூப்பிட்டேன். காற்றின் வெளிகளில் பறந்து என் மகன் வர மாட்டானா என்று என் தாய் வாசல் காத்தே கிடக்குது.அம்மாக்கள் தமிழ்சினிமாக்களில் எப்போதும் தியாகிகளாகவே இருந்திர்க்கிறார்கள். அம்மாக்கள் மனுஷிகளாக, வெளிச்சமும் நிழலுமாய் இருந்ததே இல்லை. அகி தரப் போகும் முத்தங்களைப் பெற அவன் அம்மா தயாராய் இல்லை. முத்தங்கள் பெறாத கன்னங்களில் அவை இடப்படலாம் என்று உணர்த்துவதே மிஷ்கினின் உன்னதம்.
எதை சொல்ல? ஒரு பறவை என் குரலை என் மகனிடம் கொண்டு செல்லும் என்று வானை நோக்கி நான் அவன் பேர் சொல்லிருக்கிறேன். சாலையில் போகும் பையஙளில் என் மகனின் சாயல நான் தேடி பேருந்து ஜன்னல்களில் தலை சாய்த்திருக்கிறேன்.அதே பரிதவிப்பு அகியிடமும் இருக்கிறது. மணிக்கு அம்மா மேல கோபம். அதை காட்ட அகியோடு பயணப்படுகிறான்.அந்த பயணம் நம்மோடு இணைகிற அந்த புள்ளி மகத்தானது.
நிழலுருவம் அகியை அம்மா அங்கே என்று காட்டுகிறது. சந்துகளில் ஓடும் அகியை மறுபடியும் கைக்காட்டுகிறது.அங்கே வருபவர் ஸ்கனிதா. முத்தங்களற்ற கன்னங்கள் உடையவர். முதல் முறையாக தமிழ் சினிமாவில் முத்தத்தின் பரிசுத்தம் இரட்சிக்கப்பட்டு இருக்கிறது
மகனைக் கடக்கும் அம்மாக்களுக்கு மகனைத் தேடவில்லை. தேடலில்லை என்று தீர்மானித்தவள் வலிகள் நிரம்பப்பட்டிருக்கிறாள்.எந்த தருணத்திலும் யாரும் அன்பிற்கு புறம்பாய் வனமங்கள் சுமப்பதில்லை. மனிதம் பற்றி வேறு எந்த தமிழ் சினிமா இத்தனை நம்பிக்கை தருகிறது? கதாநாயகியான நடிகையை பாலியியல் தொழில் செய்ய வைக்கும் தமிழ் சினிமா முதல் முறையாக அவளின் மனதை படம் காட்டுது. இந்த மழையிம் ஒரு அர்த்தம் இருக்கிறது. மனிதர்கள் உறங்கும் போது ஓரமாய் நெளியும் மலைப்பாம்பில் ஒரு அர்த்தம் இருக்கிறது. படிமங்கள் விரியும் போது மனசில் நெகிழ்தல் இயல்பாகிறது.
கால்கள். பயணத்தின் கோள். ஆனால் கால்களில் பலமற்றவன் அவனது கால் வெட்டப்படும் போது கால் கால் என்று அழுகிறான்.மவுனத்தின் பாஷை உணரப்படும் தருணங்களில் உரையாடல்கள் பலமிழப்பது சாதாரணமாக நிகழ்கிறது.வாழ்க்கைக்கும் கனவுக்கும் தூரங்கள் நிரைய இருப்பினும் நாம் கனவுகளை விரும்புகிறோம். துயரங்கள் கனவாய் விலகி செல்லாதா என நம்புகிறாம். இந்த இடர்பாடில் நம்முடன் இருக்கும் மனிதர்களையும் அவர்களின் செயல்பாடுகளில் விரியும் அன்பெனும் மகோத்துவத்தை மறந்தும் போகிறோம். அதன் நினைவுறுத்தலே நந்தலாலா.
ஹவ் டூ நேம் இட்டை பாலு மகேந்திரா அவரின் வீடு படத்தில் எப்படி தாத்தா கட்டப்படும் வீட்டின் படிக்கட்டுகளில் கால் வைத்ததும் உபயோகப்படுத்தி இருப்பார் என்று நானும் அம்முவும் பள்ளிக் காலங்களில் வியந்து போவோம். நநதலாலாவின் இன்னொரு கதாபாத்திரம் இசை. ராஜா மட்டும் உயர்சாதிக்காரராய் இருந்திருந்தால் தமிழ் சினிமா அவருக்கு வேறு பல அங்கீகாரங்கள் கொடுத்திருக்கும்.
என் மகனைத் தேடும் தருணங்களில் அவன் புகைப்பட உருவத்தை விரலகளால் நீவி விடுவதுண்டு. அவனின் முதல் அழுகை முதல் முதல் உடுப்பின் பால் வாடை வரை மனதில் வந்து போகும். இப்போதெல்லாம் நந்தலாலா பார்த்தப் பிறகு அவனை புகைப்படத்தில் நான் பார்ப்பதில்லை.அவனை நேரில் பார்க்க நான் காத்திருப்பேன்.
என் மகன் வருவான்.



4 comments:
Hii.. this is my first comment..
Your way of writing and choosing of words is awesome. i m really impressed with your way of writing.
Superb film review.. I have read so many reviews for "nandalal but your review is different. you have written it from your heart..
Superb..thanks.
என் மகனைத் தேடும் தருணங்களில் அவன் புகைப்பட உருவத்தை விரலகளால் நீவி விடுவதுண்டு. அவனின் முதல் அழுகை முதல் முதல் உடுப்பின் பால் வாடை வரை மனதில் வந்து போகும். இப்போதெல்லாம் நந்தலாலா பார்த்தப் பிறகு அவனை புகைப்படத்தில் நான் பார்ப்பதில்லை.அவனை நேரில் பார்க்க நான் காத்திருப்பேன்.
என் மகன் வருவான்.
...... Tears are in my eyes ..... My heart goes out to you, dear.
வருவான்!
படிக்கும்போதே ரொம்ப கஷ்டமா இருக்கு.
Post a Comment