கவுரவ கொலைகள்
>> Friday, 3 September 2010
கவுரவ கொலைகள்...இந்த வார்த்தை சமீப காலமாய் மிக அதிகமாக பேசப்படும் வார்த்தையாகி ஆகி விட்டது.குடுமபத்தின் கவுரவத்தை பாதுகாக்க, தோள் மீது தூக்கி வளர்த்த சொந்தங்களே ஆயினும் கொலை செய்வது என்று ஒற்றை வரியில் அர்த்தங்கள் சொல்ல முடியும்.ஆனால் மனித உரிமைகள் அரங்கில் இந்த அர்த்தத்தை கொலைகளுக்கான காரணமாக சொல்ல முடியுமா?
சமூகம் நமக்கு மனிதர்கள் என்னும் முத்திரைப் போகவும் வேறு சில அடையாளங்களை நம் மீது திணிக்கிறது.அவை நாம் சார்ந்திருக்கும் குடும்பத்தின் அடையாளத்திலிருந்து நம் மீது சுமத்தப்படுபவை.சாதி. மதம்.கடவுள்.பெயர்.சமூக பழக்கங்கள். திருமணம். உணவுமுறைகள்.உடை கலாசாரம் கூட இதை ஒட்டியே ஒரு மனிதனுக்கு அமைகிறது.வாழ்வில் நம் மீது திணிக்கப்பட்ட இது போன்ற விஷய்ங்களை நாம் கேள்விகள் எதுவும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.ஆனால் திருமணத்தின் மூலமாக காலத்துக்கும் நம்முடன் பயணப்படும் துணையைத் தேடிக் கொள்கிறோம். அனுபவங்களின் பலனாய் நம் வீட்டுப் பெரியவர்கள் துணையைத் தேடித் தருவதை ஒத்துக் கொள்ளும் சமூகம், தங்கள் மனம் ஒத்த துணையை தேடிக் கொள்பவர்களை அடையாளப்படுத்துவதே "ஓடிப் போயிட்டாங்க" என் கிற வார்த்தைகளால் தான்.
எது இப்படிப்பட்ட சமூக எதிர்ப்பை தீர்மானிக்கிறது? மதம். சாதி. பொருளாதாரம். இன்றைய காலகட்டங்களில் பொருளாதாரமும் ஒரு மதமாகத் தானிருக்கிறது.இதையெல்லாம் மீறி திருமணம் செய்து கொள்பவர்கள் மீது தான் இந்த கவுரவ கொலைகள் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகின்றன.முறையற்ற உறவு கொள்பவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பைபிளில்லேயே சான்றுகள் உள்ளன. ஜூடாவின் மருமகள் டாரார் முறையற்ற விதத்தில் கர்ப்பம் அடையும் போது அவளை எரிக்க அவர் உத்திரவிட்டதாக அறிகிறோம்.
இரானியப் பெண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திலிருந்து பாதுகாக்க கவுரவ தற்கொலைகள் செய்திருக்கிறார்கள்.சமீபத்தில் தன் பெண்ணின் காதலை ஏற்க மறுத்திருக்கும் தகப்பன் அவர் மகளை மயக்க ஊசிப் போட்டும் காதில் விஷம் ஊற்றியும் கொன்றிருக்கிறார்.ஒரு குடும்பத்தின் கவுரவம் அவர்களின் சந்தோஷமாக ஏன் காலகாலமாக கருதப்படுவதில்லை? எந்த அடையாளங்கற்று தான் ஒரு மனிதனின் வாழ்க்கை முடிவடைகிறது. அவனுக்கு நடக்கும் சடங்குகளில் ஒட்டியிருக்கும் மதம் அவனுக்கு எந்த சலனத்தையும் தருவதில்லை. பின் ஏன் அடையாளங்களை சிலுவைகளாய் நாம் சுமந்து கொண்டிருக்கிறோம் ?
தமிழ் சினிமாக்களின் பலமற்ற காதலுக்கு ,மீசை முறுக்கி காதலர்களின் அப்பா கர்ஜிப்பதை சகஜமாகப் பார்க்கும் நாம், இத்தகைய கவுரவ கொலைகளைப் ப்ற்றி தெரிய வரும் போது, "இதத் தான் படமா எடுக்கிறான் " என்று காரணமாய் வேறு சொல்கிறோம்.
பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, பீகார் மாநிலங்களில் நண்டாய் பரவும் இந்த சாதி கலாசாரத்தின் உச்சமே சமீப காலமாய் பெருகி வரும் கவுரவ கொலைகள். ஹுயுமன் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என் கிற அமைப்பு இதற்கான முக்கிய காரணம் பெண்கள் மீதான சந்தேகமும் கவுரவத்தின் மீதான கறைகளை நீக்குவதும் தான் என் கிறது.
ஆல் த பர்ப்யூம்ஸ் ஆப் அரேபியா வில் நாட் ச்வீட்டென் திஸ் லிட்டில் ஹேண்ட் என்று லேடி மாக்பத் சொல்வது போல் சேக்ஸ்பியர் ஒரு வரி உண்டு. இந்த பாதக செயலை செய்யும் கவுரவ புருஷர்களுக்கு சட்டம் தண்டனையைக் கொடுக்கலாம். குழந்தையற்ற அல்லது உறவினர்களை விபத்தில் இழந்தவர்கள் வீட்டில் போய் கேட்டுப் பார்க்கட்டும். உயிரின் வலி புரியும்.வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் இதற்கெதிரான மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இத்தகைய கொடூர செயல்கள் புரிபவர்களிடம் என்ன கவுரவம் இருக்கிறது என்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேட்டுள்ளதன் மூலமாக இப்பிரசனை பெற்றிருக்கும் அரசியல் "அந்தஸ்தும்" புரிகிறது.ஆனால் சாதியையும் மதத்தையும் வைத்து அரசியல் செய்யும் வரை ச்மூக மதீப்பீடுகள் மாறாது என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அடிப்படை மாற்றங்களும் மனநிலையில் முதிர்ச்சியும் ஏற்படாதவரை சட்டரீதியான முடிவுகள் தண்டனைகள் மட்டும் பெற்றுத் தரும்.
கவுரவம் என்பது என்ன ? சக உயிரை மதித்தல் போகவும் வேறென்னவாக இருக்க முடியும் சொல்லுங்கள்.


1 comments:
கவுரவம் என்பது என்ன ? சக உயிரை மதித்தல் போகவும் வேறென்னவாக இருக்க முடியும் சொல்லுங்கள்.
----------------
இதனுள் நிறைய விஷயம் அடங்கியிருக்கு தமயந்தி..
அடிப்படை சர்வைவலில் மட்டும்தான்..
உச்சிதான் சக உயிர் மதித்தல்..
Abraham Maslow - there are general needs (physiological, safety, love, and esteem) which have to be fulfilled before a person is able to act unselfishly
These needs were dubbed "deficiency needs." While a person is motivated to fulfill these basal desires, they continue to move toward growth, and eventually self-actualization..
ஆக 5வது படியில் தான் சக உயிர் மதித்தல்..அதுக்கு முன்னால்தான் போட்டி பொறாமை எல்லாம் .. இறுதியில் ஞானம்..:))
நல்ல கட்டுரை..
வாழ்த்துகள்
Post a Comment